கனடாவில் கோவில்களை தாக்குவோம்: காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல்
கனடாவில் கோவில்களை தாக்குவோம்: காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல்
ADDED : நவ 11, 2024 09:28 PM

ஒட்டாவா: கனடாவில் உள்ள ஹிந்து கோவில்களில், நவம்பர் 16-17 தேதிகளில் இந்திய தூதரக அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவோம் என காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளதாக, அந்த நாட்டு எம்.பி., சந்தன் ஆர்யா கூறியுள்ளார்.
இது குறித்து எம்.பி., ஆர்யா கூறியதாவது:
நவம்பர் 16ம் தேதி, மிசிசிஸ்சாவ்காவில் அமைந்துள்ள கலிபாரி கோவிலிலும், 17ம் தேதி பிராம்ப்டனில் உள்ள திரிவேனி கோவிலிலும் இந்திய துாதரக அதிகாரிகளை குறிவைத்து தாக்குவோம், அயோத்தியின் அடித்தளத்தை அசைப்போம் என எனக்கு மிரட்டல் வந்துள்ளது.
இப்பிரச்னையில் இந்திய தரப்பில் இருந்து பதில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் நடக்கும் அனைத்து செயல்பாடுகளையும் ட்ரூடோ தலைமையிலான கனடா அரசு, எளிதாக எடுத்துக்கொண்டது இதற்கு காரணம் என்று அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டினர். இதற்கிடையில், காலிஸ்தானி கொடியின் கீழ் சர்ரே காவல்துறை அதிகாரிகள் வாள் சண்டையிடும் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது.
இந்த வீடியோ குறித்து அரசின் உயர்மட்ட வட்டாரங்கள் கூறியதாவது;
காலிஸ்தானி இயக்கத்திற்கு, கனடா சர்ரே காவல்துறை வெளிப்படையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக அந்த ஆதாரங்கள் நிருபிக்கின்றன.
இது மிகவும் ஆபத்தானது, ஏனெனில் இது காவல்துறையின் பாரபட்சமற்ற தன்மை குறித்து கேள்வியை எழுப்புகிறது. காவல்துறையில் காலிஸ்தானிகள் நுழைந்துள்ளதாக எம்பி சந்தன் ஆர்யா கூறியதை இது நிரூபிக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன் வன்முறையில் ஈடுபட்ட காலிஸ்தானி கும்பல், வாள்கள் மற்றும் ஆயுதங்களுடன் ஹிந்துக்களை தாக்குவதற்காக கார்களில் சென்றுள்ளனர்.
கனடா காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, புலம்பெயர்ந்த இந்தியர்கள், ஹிந்துக்கள் மற்றும் மிதவாத சீக்கியர்களுக்கு எதிராகவும், பயங்கரவாதிகளுக்கு வெளிப்படையான ஆதரவு அளிப்பதையும் காட்டுகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.