ADDED : நவ 27, 2025 12:26 AM

ரோம்: இத்தாலியில் உயிரிழந்த தாயின் ஓய்வூதியத்தை பெற, பல ஆண்டுகளாக மாறுவேடமிட்டு மோசடியில் ஈடுபட்ட மகனை, போலீசார் கைது செய்தனர்.
ஐரோப்பிய நாடான இத்தாலியின் போர்கோ விர்ஜிலியோவைச் சேர்ந்தவர், கிராசியெல்லா டால் ஓக்லியோ. நர்சாக பணியாற்றிய இவர், மூன்று ஆண்டுகளுக்கு முன் காலமானார்.
ஆண்டுக்கு 83 லட்சம் ரூபாய் வரை வரும் அவருடைய ஓய்வூதியத்தை விட்டுத் தர மனமில்லாத அவருடைய 56 வயது மகன், இதற்காக மோசடி செய்ய துணிந்தார்.
தாயின் இறப்பை மறைத்து, மூன்று ஆண்டுகளாக அந்த ஓய்வூதியத்தை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் ஓய்வூதிய அடையாள அட்டை காலாவதியாகி உள்ளது. இதையடுத்து, அதை புதுப்பிக்க வரும்படி, நகராட்சி அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்தது.
இதற்காக, லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ், பழங்கால காதணிகள், விக் அணிந்து, தாயைப் போலவே வேடமிட்டு அவர் சென்றுள்ளார். தங்களுடைய ஆவணத்தில் உள்ள படத்துடன் ஒப்பிட்டு பார்த்த அதிகாரிகளுக்கு முதலில் சந்தேகம் வரவில்லை.
ஆனால், அவர் நடந்து கொண்ட விதம், அங்கிருந்த சிலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, போலீசுக்கு தகவல் கொடுக்கப் பட்டது.
போலீசார் அவரிடம் விசாரித்தபோது தான், ஓய்வூதியத்திற்காக மாறுவேடமிட்டு வந்ததை ஒப்புக் கொண்டார். தாயின் இறப்பை மறைக்க, உடலை 'மம்மி' போன்று பதப்படுத்தி வைத்திருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, வீட்டின் துணி அலமாரியில் மறைத்து வைத்திருந்த மூதாட்டியின் உடலை போலீசார் கைப்பற்றின.
தமிழில் வெளியான அவ்வை சண்முகி படத்தில் பெண் வேடமிட்டு, மனைவியின் வீட்டுக்குள் கணவர் சென்றது போல், தாயின் பென்ஷனுக்காக அவரைப் போல் மகன் வேடமிட்ட இந்த சம்பவம், அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

