சதம் அடித்தார் கோலி; பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
சதம் அடித்தார் கோலி; பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
UPDATED : பிப் 23, 2025 10:00 PM
ADDED : பிப் 23, 2025 02:08 PM

துபாய்: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கோலியின் அபார ஆட்டத்தால் இந்தியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கின்றன. இன்று (பிப்.,23) 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. ‛டாஸ்' வென்ற பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் ‛பேட்டிங்' தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு இமாம் உல் ஹக், பாபர் ஆசம் ஜோடி துவக்கம் தந்தது. பவுண்டரியாக விளாசிய பாபர் ஆசம், ஹர்திக் வேகத்தில் ராகுலிடம் கேட்சானார். அவர் 23 ரன்னில் (5 பவுண்டரி) வெளியேறினார். அடுத்த ஓவரிலேயே அக்சர் படேலின் துள்ளிய த்ரோவில் 10 ரன்னில் ரன்அவுட் ஆனார்.
பின்னர் இணைந்த சவுத், ரிஸ்வான் ஜோடி பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஸ்வான் 46 ரன்னில் போல்டானார். சவுத் அரைசதம் கடந்து 62 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த தயாப் தாஹிர் 4 ரன்னில் அவுட்டானார். குல்தீப் சுழலில் சல்மான் (19), ஷாகீன் அப்ரிதி (0) அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாகினர். 49.4 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் எடுத்தது. இந்தியாவுக்கு 242 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் ஷர்மா அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார். இருப்பினும் 15 பந்தில் 20 ரன் குவித்த போது அவர் ஷாகின் அப்ரிடி பந்துவீச்சில் போல்டானார். தொடர்ந்து, கில்லுடன், விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணி 100 ரன்களை எட்டிய போது, அரைசதம் அடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கில், 46 ரன்னில் அவுட்டானார். பிறகு, கோலியுடன் ஸ்ரேயாஷ் ஐயர் ஜோடி சேர்ந்து விளையாடினார்.
சிறப்பாக ஆடிய கோலி 62 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் அரைசதம் அடித்த ஸ்ரேயாஸ் ஐயர் 56 ரன்னில் அவுட்டானார். வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கோலி பவுண்டரி அடித்து சதம் அடித்தார். இதன்மூலம், 42.3 ஓவர்களில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஏற்கனவே, வங்கதேசப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடர்ந்து 2 வெற்றிகளை பதிவு செய்ததால், அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதேவேளையில், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தது.