ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் தடைகளை எதிர்கொள்ள நேரிடும்; நேட்டோ அமைப்பு கடும் எச்சரிக்கை
ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் தடைகளை எதிர்கொள்ள நேரிடும்; நேட்டோ அமைப்பு கடும் எச்சரிக்கை
ADDED : ஜூலை 16, 2025 08:02 AM

வாஷிங்டன்: 'ரஷ்யா உடன் வர்த்தகம் செய்து அதன் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவதைத் தொடர்ந்தால், சீனா, இந்தியா மற்றும் பிரேசில் கடும் தடைகளை எதிர்கொள்ள நேரிடும்' என நேட்டோ அமைப்பு பொதுச் செயலாளர் மார்க் ரூட் எச்சரித்து உள்ளார்.
இது குறித்து, நேட்டோ அமைப்பு பொதுச் செயலாளர் மார்க் ரூட் கூறியதாவது: நீங்கள் சீனாவின் அதிபராகவோ, இந்தியப் பிரதமராகவோ அல்லது பிரேசிலின் அதிபராகவோ இருந்து, ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து அவர்களின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவதைத் தொடர்ந்தால், என்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது உங்களுக்குத் தெரியும்.
ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் கடுமையான தடைகளை எதிர்கொள்ள நேரிடும். தொடர்ந்து வர்த்தகம் செய்து வந்தால் 100% பொருளாதார தடைகள் விதிக்கப்படும். இந்த மூன்று நாடுகளின் தலைவர்கள், புடினை அழைத்து தீவிரமான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
எனவே தயவுசெய்து புடினுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, அமைதிப் பேச்சு வார்த்தைகளில், தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்துங்கள். இல்லையெனில் இது பிரேசில், இந்தியா மற்றும் சீனா மீது மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.
''ரஷ்யாவின் எண்ணெய் வாங்குபவர்களில் இந்தியா முன்னணியில் உள்ளது; தடைகள் விதிக்கப்பட்டால் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும்'' என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.