குற்றச்செயலில் பிரதமர் மோடிக்கு தொடர்பா; கொந்தளித்த இந்தியா; பணிந்தது கனடா!
குற்றச்செயலில் பிரதமர் மோடிக்கு தொடர்பா; கொந்தளித்த இந்தியா; பணிந்தது கனடா!
ADDED : நவ 22, 2024 11:41 AM

ஒட்டாவா: 'இந்தியாவின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, கனடாவில் நடந்த குற்றச் செயல்கள் எதிலும், பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் ஆகியோரை தொடர்புபடுத்தவில்லை' என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொல்வதற்கான சதித்திட்டம், இந்திய அரசின் உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு தெரியும் என கனடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. கனடாவில் நடந்த குற்றச் செயல்களில் பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கூறும் பொய்யான தகவல்களை, கனடா அரசு அதிகாரிகளே பரப்பி விடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இதற்கு இந்திய அரசு சார்பில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கனடா பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நதாலி ஜி ட்ரூயின் வெளியிட்ட அறிக்கை: பிரதமர் மோடி, அமைச்சர் ஜெய்சங்கர் அல்லது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை கடுமையான குற்றச் செயல்களுடன் தொடர்புபடுத்துவது குறித்து கனடா அரசு கூறவில்லை. இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மாறாக, இது ஊகமானது மற்றும் தவறானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
'இது போன்ற அவதூறு பிரசாரங்கள் ஏற்கனவே சிதைந்திருக்கும் இரு நாட்டு உறவுகளை மேலும் சேதப்படுத்தும்' என மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.