சந்தேகத்திற்குரிய போக்கு கொண்ட நாடு: பாக்., ஐ சாடிய இந்தியா
சந்தேகத்திற்குரிய போக்கு கொண்ட நாடு: பாக்., ஐ சாடிய இந்தியா
UPDATED : மே 03, 2024 04:54 PM
ADDED : மே 03, 2024 04:24 PM

ஐக்கிய நாடுகள்: எப்போதுமே சந்தேகத்திற்குரிய போக்கினை கொண்ட நாடாக பாகிஸ்தான் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா தெரிவித்து உள்ளது.
ஐ.நா., பொதுச்சபையில், ‛ அமைதி கலாசாரம் ' என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. அதில் பேசிய பாகிஸ்தான் தூதர் முனிர் அக்ரம், இந்தியாவுக்கு எதிராக காஷ்மீர் விவகாரம், சிஏஏ சட்டம், அயோத்தி ராமர் கோவில் ஆகியன குறித்து பேசியிருந்தார்.
இதற்கு பதிலளித்து ஐ.நா.,விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் பேசியதாவது: “இந்த அவையில், சவாலான காலத்தில் அமைதிக்கான கலாசாரத்தை வளர்ப்பதற்கு நாம் முயலும்போது ஆக்கபூர்வமான உரையாடல்களில் எங்களின் கவனம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட பிரதிநிதியின் கருத்துகளை ஒதுக்கி வைப்பதற்கு நாங்கள் விரும்புகிறோம். அதன் அநீதியான மற்றும் தீங்கிழைக்கும் இயல்பினால் அக்கருத்துகள் நாகரிகமில்லாமல் இருப்பதுடன் நமது கூட்டுமுயற்சிகளை தடுப்பதாகவும் உள்ளது. நமது விவாதத்திற்கு வழிகாட்டக்கூடிய கொள்கைகளான மரியாதை மற்றும் ராஜதந்திரத்துடன் ஒத்துப்போகுமாறு அவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஆனால் எப்போதுமே சந்தேகத்துக்குரிய போக்கினையே கொண்ட ஒரு நாட்டிடம் இதனைக் கேட்பது மிகையாக இருக்குமா?
இந்தியாவானது ஹிந்து, புத்தம், ஜெயின் மற்றும் சீக்கிய மதங்களின் பிறப்பிடமாக மட்டும் இல்லாமல் இஸ்லாம், யூதம், கிறிஸ்தவம் போன்றவைகளின் கோட்டையாகவும் இருந்து வருகிறது. இந்தியாவில் தீபாவளி, ஈத், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் மத எல்லைகளைத் தாண்டி, பலதரப்பட்ட மக்களால் கொண்டாடப்பட்டு, அன்பு பகிரப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.