ADDED : ஆக 17, 2025 02:22 AM

பெஷாவர்:பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை, 300ஐத் தாண்டியது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஜூன் மாத இறுதியில், பருவமழை தொடங்கியதிலிருந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்துங்க்வா மாகாணம் மழைக்கு கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது.
தொடர் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு, ஆங்காங்கே நிலச்சரிவுகள் என மாகாணம் உருக்குலைந்துள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்ததால் மக்கள் சிக்கிக் கொண்டனர். மேலும் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகளும் புதைந்தன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 300ஐத் தாண்டியுள்ளது.
மேலும் பலரும் காணவில்லை; இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.