ADDED : ஜன 01, 2024 06:46 PM

லாகூர் : வரும் பிப்ரவரியில் நடக்க உள்ள பாகிஸ்தான் பொது தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் மாஜி பிரதமர் நவாஸ் ஷெரீப் போட்டியிட தாக்கல் செய்திருந்த வேட்பு மனு தேர்தல் கமிஷன் ஏற்றுக் கொண்டுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீப் மீது கடந்த 2018ல் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் வாழ்நாள் முழுதும் தேர்தலில் போட்டியிட தடை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தாக்கல் செய்த அப்பீல் வழக்கில் நவாஸ் ஷெரீப் விடுவிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ல் நடக்கவுள்ள பாக்., பொதுத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட நவாஸ் ஷெரீப் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவை அந்நாட்டு தேர்தல் கமிஷன் பரிசீலனையில் வைத்திருந்தது.
இந்நிலையில் அப்பீல் வழக்குகளில் இருந்து நவாஸ் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு விதிக்கப்பட்ட தகுதி நீக்கம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அவர் லாகூர் மற்றும் கைபர் பக்துன்குவா மாகாணங்களில் போட்டியிட தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவை தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.