'பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் தானாகவே வந்து இணையும்' : ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை
'பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் தானாகவே வந்து இணையும்' : ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை
ADDED : செப் 23, 2025 07:23 AM

ரபாத்: ''பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் மீது எந்த தாக்குதலும் நடத்தாமலேயே இந்தியாவுடன் தானாகவே விரைவில் இணையும்,'' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
வட ஆப்ரிக்க நாடான மொராக்கோவிற்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றுள்ளார். மொராக்கோ ராணுவ அமைச்சர் அப்தெல்டிப் லவ்டியியின் அழைப்பின் படி, அவர் அங்கு சென்றுள்ளார். மொராக்கோவிற்கு நம் ராணுவ அமைச்சர் ஒருவர் பயணம் மேற்கொள்வது இது முதல்முறை.
அங்குள்ள இந்திய சமூகத்தினருடன் ராஜ்நாத் சிங் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீ ரை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அதை தாக்கி கைப்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் எப்படியும் நம்முடையது.
பாக்., சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதி, எந்தத் தாக்குதல் நடவடிக்கையும் எடுக்காமல் இந்தியாவுடன் இணையும் நேரம் வந்துவிட்டது. பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிப்பவர்கள், நாங்களும் இந்தியர்கள் தான் என்று சொல்லும் நாள் வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.