இரட்டை கோபுர தாக்குதலை நினைவுபடுத்திய அரசு விளம்பரம்; விசாரணைக்கு பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு
இரட்டை கோபுர தாக்குதலை நினைவுபடுத்திய அரசு விளம்பரம்; விசாரணைக்கு பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு
ADDED : ஜன 15, 2025 06:49 PM

இஸ்லாமாபாத்: இரட்டை கோபுர தாக்குதலை நினைவுபடுத்துவது போல, பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் வெளியிட்ட சர்ச்சை விளம்பரம் குறித்து விசாரிக்க அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு, விமான சேவை வழங்குவதை கொண்டாடும் விதமாக, பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் எக்ஸ் தளத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், ஈபிள் டவர் இடிப்பது போன்று விமானம் பறக்கும் போட்டோ இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், 'பாரிஸ் நாங்கள் இன்று வருகிறோம்', என்று பின்னணியில் பிரான்ஸ் கொடியோடு குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விளம்பரம், கடந்த 2001ம் ஆண்டு, பயங்கரவாதிகள் கடத்தப்பட்ட விமானங்களின் மூலம், அமெரிக்காவில் இரட்டை கோபுரம், பென்டகன் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலை நினைவுபடுத்தும் விதமாக அமைந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்த விளம்பரத்துக்கு எதிராக கருத்துக்கள் கிளம்பிய நிலையில், இது தொடர்பாக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக, அந்நாட்டு பார்லிமென்டில் நிதியமைச்சர் இசாக் தர் தெரிவித்துள்ளார். மேலும், இது முட்டாள்தனமானது என்று அவர் விமர்சித்தார்.
கடந்த 2017ம் ஆண்டு போலியான உரிமம் பெற்ற விமானி ஓட்டிச் சென்ற விமானம், கராச்சியில் விபத்துக்குள்ளானதில் 97 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியன் விமானப் பாதுகாப்பு நிறுவனம், பாகிஸ்தானைச் சேர்ந்த விமான சேவைகளுக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. இந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், மீண்டும் ஐரோப்பிய நாடுகளுக்கு விமான சேவை தொடங்கியது.