இந்தியாவுடனான அனைத்து பிரச்னைகளையும் பேசி தீர்க்க தயார்; பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்
இந்தியாவுடனான அனைத்து பிரச்னைகளையும் பேசி தீர்க்க தயார்; பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்
ADDED : பிப் 06, 2025 07:07 AM

இஸ்லமாபாத்: காஷ்மீர் விவகாரம் உள்பட இந்தியாவுடனான அனைத்து பிரச்னைகளையும் பேசி தீர்க்க தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முஷாபராபாத்தில் காஷ்மீர் ஒற்றுமை தினத்தையொட்டி நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்த மத்திய அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து பேசினார்.
அப்போது, அவர் பேசியதாவது; கடந்த 2019ம் ஆண்டு ஆக.,5ம் தேதி ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த எண்ணத்தில் இருந்து இந்தியா திரும்ப வேண்டும். ஐ.நா.வில் அளித்த வாக்குறுதியை இந்தியா முழுமையாக நிறைவேற்ற வேண்டும். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். காஷ்மீர் விவகாரம் உள்பட இந்தியாவுடனான அனைத்து பிரச்னைகளையும் பேசி தீர்க்க தயாராக உள்ளோம்.
ஜம்மு காஷ்மீரில் ஆயுதங்களை குவிப்பதன் மூலம் அமைதி ஏற்பட்டு விடாது. அனைத்து பிரச்னைகளுக்கும் அமைதியே தீர்வாகும். இந்த விஷயத்தில் இந்தியா புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும், எனக் கூறினார்.