பெண்கள் பாதுகாப்பு குறித்த விவாதம் ஐ.நா.,வில் மூக்குடைபட்டது பாகிஸ்தான்
பெண்கள் பாதுகாப்பு குறித்த விவாதம் ஐ.நா.,வில் மூக்குடைபட்டது பாகிஸ்தான்
ADDED : அக் 08, 2025 03:39 AM

நியூயார்க்:ஐ.நா.,வில் நடந்த பெண்கள் மற்றும் பாதுகாப்பு குறித்த விவாதத்தின் போது, இந்தியா மீது குற்றஞ்சாட்டிய பாகிஸ்தான் துாதர் சைமா சலீமுக்கு, இந்திய துாதர் பர்வதனேனி ஹரிஷ் தக்க பதிலடி கொடுத்தார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் பெண்கள், அமைதி, பாதுகாப்பு குறித்து உலக நாடுகள் ஆண்டுதோறும் விவாதங்கள் நடத்துவது வழக்கம்.
பதிலடி நடப்பாண்டுக்கான விவாதம் பாதுகாப்பு கவுன்சிலில் நடந்தது. இதில் பங்கேற்ற பாகிஸ்தானின் பிரதிநிதியான சைமா சலீம், காஷ்மீர் பெண்கள், 'போர் ஆயுதமாக' பயன்படுத்தப்படுவதாகவும், பாலியல் வன்முறையை சந்திப்பதாகவும் கூறினார்.
இதற்கு பதிலளித்து, இந்திய பிரதிநிதியான பர்வதனேனி ஹரிஸ் கூறியுள்ளதாவது:
பாகிஸ்தான், காஷ்மீர் குறித்து மாயத்தோற்ற தாக்குதல் நடத்துகிறது. இது, திசை திருப்பப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட நாடகம்.
தகுதியற்றது முன்னர், கிழக்கு பாகிஸ்தான் என அழைக்கப்பட்ட தற்போதைய வங்கதேசத்தின் மீது, 1971ல் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
வங்கதேச தேசியவாத இயக்கத்தை ராணுவ பலம் கொண்டு ஒடுக்க பாகிஸ்தான் ராணுவ ஆட்சியால் துவங்கப்பட்ட இரக்கமற்ற ராணுவ நடவடிக்கைதான், இந்த ஆப்பரேஷன் சர்ச்லைட் என்பதாகும்.
இந்நடவடிக்கையின் போது, மூன்று முதல் 30 லட்சம் பேர் வரை கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் ராணுவம் கூட்டு பாலியல் வன்முறையை ஒரு திட்டமிட்ட ஆயுதமாக பயன்படுத்தியது.
இதில், நான்கு லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர்.
தங்கள் சொந்த ராணுவத்தால், நான்கு லட்சம் பெண்கள் மீது கூட்டு பாலியல் வன்முறைக்கு பச்சைக்கொடி காட்டிய ஒரு நாடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து மற்ற நாடுகளுக்கு பாடம் எடுப்பதற்கு அறவே தகுதியற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.