பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்க முடியாது; இஸ்ரேல் பிரதமர் அமெரிக்காவில் பேட்டி
பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்க முடியாது; இஸ்ரேல் பிரதமர் அமெரிக்காவில் பேட்டி
ADDED : ஜூலை 09, 2025 07:05 AM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடனான சந்திப்புக்கு பின், செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்கவே முடியாது, என்றார்.
மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தீவிர போர் நடந்தது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்பட்டன. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் இணைந்து ஈரானை தாக்கியது. அதன் பின், இரு தரப்பிலும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஈரானுடனான போரில் வெற்றியடைந்ததற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை அழைத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் விருந்து வைத்தார். இந்தாண்டில் இருவருக்கு இடையே நடக்கும் மூன்றாவது சந்திப்பு இது. விருந்தின் போது பாலஸ்தீனத்தின் காசாவில் போரை நிறுத்தும்படி டிரம்ப் வலியுறுத்தினார்.
சலுகை கிடையாது
இஸ்ரேல் மற்றும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் இடையே இது தொடர்பாக கத்தாரில் மறைமுக பேச்சு நடந்து வருகிறது. இதற்கிடையே விருந்துக்கு பின் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது போர் நிறுத்தத்திற்கு எது தடையாக உள்ளது என, அதிபர் டிரம்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ''எந்தத் தடையும் இல்லை என்று நினைக்கிறேன். பேச்சுக்கள் மிகவும் சிறப்பாக போய்க் கொண்டுள்ளன,'' என்றார். போர் நிறுத்தம் குறித்து பேசிய நெதன்யாகு, பெரிய சலுகைகள் எதுவும் காட்டப்படாது.
தனிநாடு
ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன அரசுகள் பயங்கரவாதிகளுக்கான பதுங்கு குழிகளைக் கட்டி, எங்கள் நாட்டிற்குள் அவர்களை அனுப்பி படுகொலைகளையும், பலாத்காரத்தையும் அரங்கேற்றினர். ''காசா எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். பாலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்க முடியாது,'' என்றார்.