பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
ADDED : ஏப் 26, 2024 03:36 PM

வாஷிங்டன்: கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலை வளாகத்தில், இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தியதற்காக ஹசன் சயீத் மற்றும் அசிந்தியா சிவலிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலை நிர்வாகம் கூறியுள்ளது.
இந்த கைது நடவடிக்கைக்கு, மற்ற மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். போராட்டம் நடத்துவதற்காக அவர்கள் கூடாரம் அமைத்து இருந்தனர். அதனை காலி செய்ய உத்தரவிட்டுள்ள போலீசார், அங்கு வைக்கப்பட்ட பொருட்களை அகற்றவும் உத்தரவிட்டு உள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் அசிந்தியா சிவலிங்கம் என்பவர் தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் பிறந்தவர் என தெரியவந்துள்ளது. இவர் தமிழகத்தில் பிறந்தாலும், அமெரிக்காவின் ஓஹியோவின் கொலம்பஸ் பகுதியில் வளர்ந்தார். ஓஹியோ மாகாண பல்கலையில், உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுள்ளார். பிரின்ஸ்டன் பல்கலையில், சர்வதேச வளர்ச்சியில் பொது விவகாரங்கள் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டதால், பல்கலை வளாகத்திற்குள் நுழைய, அசிந்தியா சிவலிங்கத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

