டெக்சாஸில் வரலாறு காணாத வெள்ளம் பலி 51 ஆனது; 27 சிறுமியர் மாயம்
டெக்சாஸில் வரலாறு காணாத வெள்ளம் பலி 51 ஆனது; 27 சிறுமியர் மாயம்
ADDED : ஜூலை 06, 2025 11:43 PM

கெர்வில்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் திடீர் கனமழையால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்தது; 27 சிறுமியர் மாயமாகி உள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சான் ஆன்டனியோ அருகே உள்ள மலைப்பகுதி கெர்ர்வில். இந்த நகருக்கு அருகே குவாடலுாப் ஆறு ஓடுகிறது. நேற்று முன்தினம் இந்த பகுதியில் வரலாறு காணாத கனமழை கொட்டியது.
இதனால் குவாடலுாப் ஆற்றின் நீர்மட்டம் 45 நிமிடங்களில் 26 அடி உயர்ந்தது. 1987ல் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளத்தை இந்த அளவு தாண்டியுள்ளது.
குவாடலுாப் ஆற்றங்கரையில் அமைந்த மிஸ்டிக் என்ற சிறுமியருக்கான கிறிஸ்துவ கோடைகால முகாமுக்குள், வெள்ள நீர் பாய்ந்தது.
இங்கு தங்கியிருந்த, 700க்கும் மேற்பட்டோரில், பெரும்பாலானோர் மீட்கப்பட்டனர்.
முகாமில் தங்கியிருந்த 27 சிறுமியரை காணவில்லை. இதனால் பெற்றோர் பரிதவித்துள்ளனர். தங்கள் குழந்தைகளின் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மீட்க உதவிகேட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வெள்ளம் காரணமாக கெர் கவுன்டியில் மட்டும் 43 பேர் உயிரிழந்தனர். அதில் 15 பேர் குழந்தைகள்.
அருகில் உள்ள மற்ற ஊர்களான டிராவிஸ், பர்னெட் ஆகிய பகுதிகளில் எட்டு பேர் பலியாகியுள்ளனர். இதனால் நேற்று பலி எண்ணிக்கை 51 ஆக உயர்ந்தது.
டெக்சாஸ் மாகாணம் ரெபேக்கா க்ரீக் அருகே உள்ள பாலத்தை மூழ்கடித்துச் சென்ற குவாடலுாப் ஆறு.