இந்தோனேஷியாவில் பள்ளி இடிந்த சம்பவம் 3 நாட்களை கடந்தும் தொடரும் மீட்பு பணி
இந்தோனேஷியாவில் பள்ளி இடிந்த சம்பவம் 3 நாட்களை கடந்தும் தொடரும் மீட்பு பணி
ADDED : அக் 03, 2025 04:32 AM
ஜகார்த்தா:தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடோவார்ஜோ நகரில் அல் கோசினி என்ற முஸ்லிம் பள்ளி இயங்கி வருகிறது.
சமீபத்தில், அந்த வளாகத்தில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் ஒரு பகுதியில் மாணவர்கள் தொழுகையில் ஈடு பட்டிருந்தபோது, கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதைந்தனர்.
இவ்விபத்தில் இதுவரை ஐந்து மாணவர்கள் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கட்டட இடிபாடுகளுக்குள் கிட்டத்தட்ட 59 மாணவர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அவர்களில் பெரும்பாலானோர், 12 முதல் 19 வயதுக்குட்பட்டோர்.
மீட்பு பணியின் ஆரம்பத்தில், கனரக இயந்திரங்களை பயன்படுத்தினால் இடிபாடுகள் மேலும் சரிந்து மாணவர்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படலாம் என கருதி, அது பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட்டது.
ஆனால், விபத்து நடந்து 72 மணி நேரம் ஆனதால், யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என மீட்பு பணியில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இ தையடுத்து, மண் அள்ளும் கனரக இயந்திரங்களை பயன்படுத்தி மாணவர்களின் உடல்களை மீட்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தங்கள் பிள்ளைகள் உயிருடன் மீட்கப்படுவர் என்ற நம்பிக்கையில், அவர்களின் குடும்பத்தினர் விபத்து நடந்த இடத்திலேயே காத்திருக்கின்றனர்.
அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை அந்நாட்டு அரசு வழங்கி வருவதாக கூறப்படுகிறது.