மியான்மரில் தொடரும் மீட்பு பணிகள்; இடிபாடுகளிலிருந்து கர்ப்பிணி மீட்பு
மியான்மரில் தொடரும் மீட்பு பணிகள்; இடிபாடுகளிலிருந்து கர்ப்பிணி மீட்பு
ADDED : ஏப் 01, 2025 03:52 AM

மண்டாலே : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டட குவியல்களை அகற்றுவது உள்ளிட்ட மீட்புப் பணிகள் மியான்மரில் தொடர்ந்து நடக்கின்றன. இதற்கிடையே, கட்டட இடிபாடுகளில் இருந்து, 60 மணி நேரத்துக்கு பின், கர்ப்பிணி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
நம் அண்டை நாடான மியான்மரில், கடந்த மார்ச் 29ம் தேதி, ரிக்டர் அளவுகோலில், 7.7 அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில், 2,00-0க்கும் மேற்பட்டோர், பலியானதாக கூறப்படுகிறது. இதைத் தவிர, 3,000க்கும் மேற்பட்டோர் காணவில்லை. இவர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கம் ஏற்பட்டு, மூன்று நாட்களை கடந்துள்ள நிலையில், தற்போதுதான் மீட்புப் பணிகள் வேகமெடுத்துள்ளன.
சாலைகளில் பெரிய வெடிப்புகள் ஏற்பட்டது உள்ளிட்ட காரணங்களால், மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. தற்போது கனரக வாகனங்கள் வாயிலாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பல நாடுகளில் இருந்தும் வந்துள்ள மீட்புப் பணி நிபுணர்கள், இந்தப் பணியில் ஈடுபட்டுஉள்ளனர். நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த ஒரு ஹோட்டலின் இடிபாடுகளில் இருந்து, கர்ப்பிணி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இடிபாடுகளில், 60 மணி நேரத்துக்கும் மேலாக சிக்கியிருந்த நிலையில், மீட்புப் படையினர் நேற்று முன்தினம் அவரை மீட்டனர். உடனடியாக மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து மீட்புப் படையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை உயிருடன் மீட்க வாய்ப்பு உள்ளதால், தங்களுடைய பணியை தீவிரப்படுத்திஉள்ளனர்.