இந்தியாவுக்கு வரி; ரஷ்யாவுடன் பேச்சு அமெரிக்காவின் தில்லாலங்கடி
இந்தியாவுக்கு வரி; ரஷ்யாவுடன் பேச்சு அமெரிக்காவின் தில்லாலங்கடி
ADDED : ஆக 27, 2025 11:06 PM
மாஸ்கோ:கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி, இந்தியாவுக்கு கூடுதல் வரி விதித்துள்ள அமெரிக்கா, அதே நேரத்தில் ரஷ்யாவுடன் பேச்சு நடத்துகிறது.
ரஷ்யாவின் 'சகலின் - -1' எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டம், ஒரு சர்வதேச முதலீட்டு திட்டம். இதில் அமெரிக்க நிறுவனமான 'எக்ஸான் மொபில்' 30 சதவீதம்; ஜப்பானின் 'சோடெகோ' 30 சதவீதம்; இந்தியாவின் ஓ.என்.ஜி.சி., விதேஷ் 20 சதவீதம் மற்றும் ரஷ்யாவின் 'ரோஸ்னெப்ட்' 20 சதவீத பங்குகளை வைத்திருந்தன.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா 2022ல் போர் துவக்கியதால், அமெரிக்க நிறுவனமான எக்ஸான் மொபில் பங்குகளை விற்று வெளியேறியது. இந்தியா மற்றும் ஜப்பான் பங்குகளைத் தக்க வைத்துக்கொண்டன.
இந்த திட்டத்தை, ரஷ்யாவின் ரோஸ்னெப்ட் நிர்வகிக்கிறது. தற்போது நாளொன்றுக்கு 2 லட்சம் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது.
உக்ரைனுடன் ரஷ்யா அமைதி ஒப்பந்தம் எட்டுவதை ஊக்குவிக்க, சகலின் - -1 திட்டத்தில் மீண்டும் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் நிறுவனமான எக்ஸான் மொபிலை நுழைக்க முயற்சி நடந்து வருகிறது.
இதற்காக, அத்திட்டத்தை நிர்வகிக்கும் ரஷ்யாவின் ரோஸ்னெப்ட் நிறுவன அதிகாரிகளுடன் எக்ஸான் மொபில் நிறுவன அதிகாரிகள் பலமுறை பேச்சு நடத்தியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்காக கச்சா எண்ணெய் வாங்கும் நம் நாட்டை, உலக அரங்கில் குற்றம்சாட்டுவதுடன், கூடுதல் வரி விதித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், சத்தமின்றி அதே வேலையில் ஈடுபட்டு வருகிறார்.