கனடாவில் பயங்கரவாத தாக்குதல்? கூட்டத்தில் கார் புகுந்து 9 பேர் பலி
கனடாவில் பயங்கரவாத தாக்குதல்? கூட்டத்தில் கார் புகுந்து 9 பேர் பலி
ADDED : ஏப் 28, 2025 01:19 AM

வான்கூவர்; கனடாவில் சாலையில் நடந்த இசைத் திருவிழாவின் போது, கூட்டத்தில் அதிவேகமாக புகுந்த கார் ஏற்படுத்திய விபத்தில் ஒன்பது பேர் பலியாகினர்.
வட அமெரிக்க நாடான கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள சாலையில் நேற்று முன்தினம் இரவு இசைத் திருவிழா நடந்தது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஸ்பெயின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்த லாப்பு லாப்பு என்ற தளபதியின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக நடந்த விழாவில், கனடாவில் இருந்த பிலிப்பைன்ஸ் நாட்டினர் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். ஆடல், பாடல், இசை, உணவு என கலாசார திருவிழா களைகட்டியிருந்தது.
அப்போது, கூட்டத்தின் நடுவே வேகமாக சீறிப் பாய்ந்த சொகுசு காரால், அப்பகுதியே போர்க் களமாக மாறியது.
விழாவில் பங்கேற்றவர்களை இடித்து தள்ளியபடி சென்ற கார், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்றின் மீது மோதி நின்றது.
விழாவில் பங்கேற்றவர்களின் உடல்கள் சாலையெங்கும் துாக்கி வீசப்பட்டிருந்தன. ஆங்காங்கே, படுகாயங்களுடன் விழுந்து கிடந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து ஏற்படுத்திய காரில் இருந்த ஓட்டுனரை, கையும், களவுமாக பிடித்த அங்கிருந்த மக்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், விபத்து ஏற்படுத்தியது வான்கூவர் நகரைச் சேர்ந்த, 30 வயது நபர் என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது. அந்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டிருப்பதாக கூறிய போலீசார், ஒன்பது பேரின் உடல்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவித்தனர்.
மேலும் பலர், படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் விபத்து போல தோன்றினாலும், நெரிசல் மிகுந்த பகுதியில் வாகனத்தை இயக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

