என்.ஐ.ஏ.,வால் தேடப்படும் பயங்கரவாதி அமெரிக்காவில் கைது
என்.ஐ.ஏ.,வால் தேடப்படும் பயங்கரவாதி அமெரிக்காவில் கைது
ADDED : ஏப் 18, 2025 08:57 AM

வாஷிங்டன்: பல்வேறு தாக்குதல்களில் தொடர்புடைய, இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு சண்டிகரில் உள்ள வீட்டில் நடத்தப்பட்ட குண்டு வீச்சில் தொடர்புடைய ஹேப்பி பாசியா என்று அழைக்கப்படும் ஹர்ப்ரீத் சிங்கிற்கு எதிராக, கடந்த ஜனவரி மாதம் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை என்.ஐ.ஏ., பிறப்பித்தது.
தலைமறைவாக இருக்கும் ஹேப்பி பாசியாவுக்கு ஏற்கனவே, பஞ்சாப்பில் நடத்தப்பட்ட 14 குண்டு வீச்சு தாக்குதல்களில் தொடர்பு உள்ளது. கடந்த 7 மாதங்களில் பா.ஜ., தலைவர் மனேராஞ்சன் கலியா உள்பட அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் வீடுகள் மீது தாக்குதல், போலீஸ் நிலைகள் மற்றும் வழிபாட்டு தலங்களின் மீதும் தாக்குதலை நடத்தியுள்ளார்.
காலிஸ்தான் தீவிரவாத அமைப்பான, பப்பர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்புடன் தொடர்புள்ள ஹேப்பி பாசியா குறித்து தகவல் அளித்தால் ரூ.5 லட்சம் சன்மானத்தை என்.ஐ.ஏ., அறிவித்திருந்தது.
இந்த நிலையில், என்.ஐ.ஏ.,வால் தேடப்படும் பயங்கரவாதியான ஹேப்பி பாசியாவை அமெரிக்காவில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

