சண்டையை நிறுத்துவது குறித்து தாய்லாந்து - கம்போடியா இன்று பேச்சு
சண்டையை நிறுத்துவது குறித்து தாய்லாந்து - கம்போடியா இன்று பேச்சு
ADDED : ஜூலை 27, 2025 11:53 PM

சுரின்:தாய்லாந்து - கம்போடியா இடையே நடந்து வரும் சண்டையை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக இரு நாட்டு தலைவர்களும் இன்று மலேஷியாவில் சந்தித்து பேச்சு நடத்த உள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே, நீண்ட காலமாக எல்லை பிரச்னை இருந்து வருகிறது.
இது கடந்த 24ல் மோதலாக வெடித்தது. அப்போது எல்லையில் கண்ணி வெடியில் சிக்கி தாய்லாந்து வீரர்கள் ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து கம்போடியா மீது ஏவுகணைகளை வீசியது தாய்லாந்து. பதிலுக்கு க ம்போடியாவும் தாக்குதல் நடத்தியது.
நா ன்காவது நாளாக நேற்று அதிகாலையும் இந்த சண்டை தொடர்ந்தது. இதில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. எல்லை கிராமங்களில் உள்ள குடியிருப்புகளை நோக்கி கம்போடியா தாக்குதல் நடத்தியதாக தாய்லாந்து குற்றம்சாட்டியது.
இந்த பிரச்னைக்கு முக்கிய காரணமான பிரசாத் தா முயன் தோம் கோவில் மீது, பிஎம் -21 ரக ராக்கெட்டுகளை ஏவியதாக தாய்லாந்து கூறியுள்ளது. ஹிந்து - புத்த கோவிலான இதை இரு நாடுகளும் உரிமை கோருகின்றன.
மறுபுறம் நீண்ட துார இலக்குகளை குறிவைக்கும் பீரங்கிகளை பயன் படுத்தி தங்கள் நாட்டு எல்லைக்குள் ஏவுகணைகளை தாய்லாந்து ஏவியதாக கம்போடியா கூறியது.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு நாட்டு தலைவர்களிடம் தொலைபேசி வாயிலாக பேசி, சண்டையை நிறுத்தும்படி கேட்டுக் கொ ண்டார். கம்போடியா சண்டையை நிறுத்த சம்மதம் தெரிவித்தது.
இது குறித்து தாய்லாந்து ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் ரிச்சா சுக்சோவானன்ட் நேற்று கூறுகையில், “மத்தியஸ்தம் செய்யும் அதிபர்  டிரம்பின் முயற்சி தனி விஷயம்.
''கம்போடியா மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை மீண்டும் மீண்டும் மீறுகிறது.
“நல்லெண்ணத்தில் அவர்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். அதிகாரப்பூர்வ பேச்சுக்கு கம்போடியா வரும் வரை சண்டை தொடரும். அமைதியாக செல்ல முடியாது,” என்றார்.
இந்த அறிவிப்புக்கு பின், மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்  இரு நாட்டு தலைவர்களையும் அமைதி பேச்சு நடத்த அழைப்பு விடுத்தார்.
அதை ஏற்று தாய்லாந்து பொறுப்பு பிரதமர் பும்தம் வெச்சாயாசாய் மற்றும் கம்போடியா பிரதமர் ஹுன் மானெட் இருவரும் இன்று மலேஷியாவில் சந்திக்க உள்ளனர்.

