ADDED : நவ 01, 2024 02:15 AM
வாஷிங்டன்,
வட அமெரிக்க நாடான கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப்சிங் நிஜ்ஜார், 2023ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருந்தார். இதை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
இரு தரப்பு உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. நிஜ்ஜார் கொலை வழக்கு தொடர்பாக, அமெரிக்காவைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.
கனடா வெளியுறவுத் துறை இணையமைச்சர் டேவிட் மோரிசன், 'கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிராக வன்முறையைத் துாண்ட, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டமிட்டுள்ளார். இது குறித்து வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். நான் அதை உறுதி செய்தேன்' என, தெரிவித்திருந்தார்.
அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், “அமித்ஷா மீது கனடா புகார் தெரிவித்துள்ளது கவலை அளிக்கிறது. கனடா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்,” என்றார்.

