ADDED : மார் 02, 2026 06:30 AM

டெஹ்ரான்: மேற்காசிய நாடான ஈரான் மீது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நேற்று முன்தினம் மிகப் பெரிய தாக்குதலை நடத்தின. குறிப்பாக, தலைநகர் டெஹ்ரானில் உச்ச தலைவர் கமேனியின் குடியிருப்பு மற்றும் அலுவலகம் மீது சரமாரியாக ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில், ஈரானின் மிக உயரிய அதிகாரம் கொண்டவரும், நீண்டகால ஆட்சியாளருமான அயதுல்லா அலி கமேனி, 86, கொல்லப்பட்டார். இதை, அந்நாட்டு அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.
கமேனியின் மறைவை தொடர்ந்து, புதிய உச்ச தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், நீதித்துறை தலைவர் மற்றும் கார்டியன் கவுன்சில் உறுப்பினர் ஆகியோர் அடங்கிய குழு நாட்டை வழி நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் உச்ச தலைவர் கமேனியை, அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ., கடந்த சில நாட்களாக உன்னிப்பாக நோட்டமிட்டு வந்தது
கமேனியின் ஒவ்வொரு நகர்வையும் கண்காணித்த சி.ஐ.ஏ., அது குறித்த தகவல்களை அவ்வப்போது இஸ்ரேலுக்கு வழங்கியது
டெஹ்ரானில் உள்ள கமேனியின் அதிகாரப்பூர்வ வீட்டில், அவரது தலைமையில் பிப்., 28 காலை உயர் ராணுவ அதிகாரிகளின் ரகசிய கூட்டம் நடக்கவிருந்த தகவலை சி.ஐ.ஏ., சேகரித்தது. அது குறித்து இஸ்ரேலுக்கு தகவல் அளித்தது
தாக்குதல் தொடர்பாக சி.ஐ.ஏ., திட்டம் வகுத்து கொடுத் தது. இதன்படி, இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது
கமேனி, ஈரான் ராணுவ அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் ஒரே இடத்தில் கூடியதை பயன்படுத்திய இஸ்ரேல், கமேனியின் வீட்டின் மீது, 30 குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், கமேனி, அவரது குடும்பத்தினர், ஈரான் ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.

