ADDED : நவ 05, 2024 07:22 AM

டெஹ்ரான் : ஹிஜாப் கட்டுப்பாட்டை எதிர்த்து, சாலையில் தன் ஆடைகளைக் களைந்த பெண் மாயமாகியுள்ளது, ஈரானில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள மேற்காசிய நாடான ஈரானில், பெண்களுக்கு கடும் ஆடை கட்டுப்பாடுகள் உள்ளன. இதற்கான சட்டம், 1980களில் உருவாக்கப்பட்டது. இதை கண்காணிக்க தனிப் படையும் உள்ளது.
இதன்படி, பெண்கள் தளர்வான உடைகளையே அணிய வேண்டும். மேலும், முகம் மற்றும் தலையை மூடும், ஹிஜாப் எனப்படும் துணியையும் பயன்படுத்த வேண்டும். இந்த கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2022ல் மாஷா அமினி என்ற மாணவி போராடினார். கைது செய்யப்பட்ட அவர் போலீஸ் துன்புறுத்தலில் கொல்லப்பட்டார்.
இதையடுத்து ஈரானில், உடைக் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. இதை கட்டுப்படுத்த ஈரான் போலீஸ், ராணுவம் கடும் நடவடிக்கைகள் எடுத்ததில், 500 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், டெஹ்ரானில் உள்ள இஸ்லாமிக் ஆசாத் பல்கலையைச் சேர்ந்த மாணவி ஒருவர், சில நாட்களுக்கு முன், தன் ஆடைகளை களைந்தவாறு சாலையில் சென்றார். உள்ளாடைகள் மட்டுமே அணிந்திருந்த அவர், ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோஷங்கள் எழுப்பினார். உடனடியாக போலீசார் அவரை வாகனத்தில் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
பல்கலையில் ஹிஜாப் கட்டுப்பாட்டு தொடர்பான நெருக்குதல்களால், அந்த பெண் இவ்வாறு செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, கணவரைப் பிரிந்த, இரண்டு குழந்தைகளின் தாயான அவர், மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக பல்கலை நிர்வாகம் கூறியது.
போலீசாரால் அந்தப் பெண் அழைத்துச் செல்லப்பட்டு, இரண்டு நாட்களாகியும் அவரது நிலை குறித்து எந்தத் தகவலும் இல்லை. அவர் தொடர்பான தகவல்களும் வெளியிடப்படவில்லை.
இதற்கு, மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆம்னெஸ்டி அமைப்பின் ஈரான் பிரிவு, அந்தப் பெண்ணின் இருப்பிடத்தை தெரிவிக்கக் கோரியும், துன்புறுத்தல்களை நிறுத்தக் கோரியும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

