ADDED : ஜூலை 01, 2025 04:55 AM

டோக்கியோ: ஜப்பான் நாட்டில், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை விட செல்லப்பிராணிகளே அதிகம் இருப்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கிழக்கு ஆசிய நாடான ஜப்பான், தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் வேகமாக வளர்ந்தாலும், அங்கு குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்துகொண்டே இருக்கிறது. கடந்த 16 ஆண்டுகளாக ஜப்பானில் குழந்தை பிறப்பு விகிதம் சரிந்த வண்ணம் உள்ளது. இதை, அவசரநிலை என பிரதமர் ஷிகேரு இஷிபா எச்சரித்த நிலையில், தற்போது வெளிவந்துள்ள புதிய தரவு மற்றொரு அதிர்ச்சியை தந்துள்ளது.
அது, ஜப்பானில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை விட செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தான். அங்கு, 14 லட்சம் குழந்தைகள் உள்ள நிலையில், நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகள் எண்ணிக்கை 16 லட்சமாக உள்ளது. கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகே இந்த எண்ணிக்கை வேகமாக உயர்ந்துள்ளது.
ஜப்பானில் தனியாக வசிக்கும் முதியோர், துணைக்கும், ஆறுதலுக்கும் செல்லப்பிராணிகளை அதிகம் வளர்ப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதேபோன்று பொருளாதாரம், சமூக காரணிகளால் ஏற்படும் மாற்றமும் குழந்தை பெற்றுக்கொள்வதை தவிர்த்து செல்லப்பிராணி வளர்ப்பில் ஆர்வம் காட்ட வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
விசுவாசத்திற்கு பெயர் பெற்ற நாய்கள், ஜப்பானிய வீடுகளின் ஒரு பகுதியாகவே எப்போதும் இருந்து வருகின்றன. அவற்றை குடும்ப உறுப்பினர்கள் போலவே நடத்துகின்றனர்.
ஷிபா இனு ஜப்பானில் மிகவும் விரும்பப்படும் நாய்களில் ஒன்றாகும். ஜப்பானின் ஷின்டோ மதமும், இயற்கைக்கும் விலங்குகளுக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பை கொண்டது.