சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மூன்றாயிரம் பேர் "மிஸ்சிங்'
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மூன்றாயிரம் பேர் "மிஸ்சிங்'
ADDED : ஜூலை 30, 2011 11:58 PM

பெய்ரூட் : 'சிரியா அதிபர் பஷீர் அசாத்துக்கு எதிராக, கடந்த நான்கு மாதங்களாக நடந்து வரும் போராட்டம் காரணமாக, இதுவரை கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களில், மூன்றாயிரம் பேர் காணாமல் போயுள்ளனர்' என, தகவல் வெளியாகியுள்ளது.
சிரியா அதிபர் பஷீர் அசாத்துக்கு எதிராக, அந்நாட்டு மக்கள் கடந்த நான்கு மாதங்களாக, கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களின் மீது, சிரியா ராணுவத்தினர் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். கிளர்ச்சி தொடங்கிய, மார்ச் 15ம் தேதி முதல், ஆயுதம் இல்லாமல் கிளர்ச்சி செய்தவர்களில், 1,600 பேரை சிரியா ராணுவத்தினர் கொன்றுள்ளனர்.
இதுகுறித்து கிளர்ச்சியாளர்கள், தங்கள் இணையதளத்தில் மேலும் கூறியிருப்பதாவது:அதிபர் பஷீர் அசாத்துக்கு எதிராக, போராடி வரும் கிளர்ச்சியாளர்களை, ராணுவத்தினர் கடுமையான முறையில், கையாண்டு வருகின்றனர். அமைதியாகப் போராடுவோரைக் கூட, வீண்பழி சுமத்தி மிருகத்தனமாக நடத்துகின்றனர். இவர்களில் பலர் கைது செய்யப்பட்டும், அவர்கள் எங்கு உள்ளனர் என்பது தெரியவில்லை. ஒரு மணி நேரத்திற்கு ஒருவர் என, கிளர்ச்சியாளர்கள் மாயமாகி வருகின்றனர். இவ்வாறு, இதுவரை 2 ஆயிரத்து 918 கிளர்ச்சியாளர்கள் மாயமாகி விட்டனர். அவர்கள் குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. இவ்வாறு இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

