சிக்கி தவித்த பயணிகளுக்கு உதவிக்கரம் நீட்டியது யுஏஇ: மொத்த செலவையும் ஏற்றதால் நிம்மதி
சிக்கி தவித்த பயணிகளுக்கு உதவிக்கரம் நீட்டியது யுஏஇ: மொத்த செலவையும் ஏற்றதால் நிம்மதி
ADDED : மார் 03, 2026 09:34 PM

அபுதாபி: விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் துபாய், அபுதாபியில் சிக்கித் தவித்தவர்களுக்கு ஆகும் கூடுதல் செலவை அந்நாட்டு அரசு ஏற்றுக் கொண்டது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளது.
ஈரான் மீதான இஸ்ரேல் , அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதல் காரணமாக மத்திய கிழக்குப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனால், விமான சேவை தடைபட்டுள்ளது. சுற்றுலா மற்றும் தொழில் நிமித்தம் துபாய், அபுதாபி போன்ற நாடுகளுக்குச் சென்றவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்திலும், கூடுதல் செலவாகும் என்ற கவலையில் இருந்தனர்.
இந்நிலையில் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அபுதாபி கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை, சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.
அபுதாபியில் உள்ள ஹோட்டல்களுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது :
தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக சில சுற்றுலா பயணிகள், புறப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டாலும், பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் கிளம்பும் வரையில் அவர்கள் தங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். விருந்தினர்கள், குறிப்பிட்ட நாளில் சொந்த நாட்டுக்கு கிளம்ப முடியாத நிலை ஏற்பட்டால், முன்பதிவு செய்துள்ள நாட்களையும் தாண்டி அவர்களை அதே அறையில் தங்க வைக்க வேண்டும். அதற்கு ஆகும் செலவை அபுதாபி சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை ஏற்றுக் கொள்ளும். இது குறித்த ரசீதுகளை அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவித்து உள்ளது.
அதேபோன்ற உத்தரவு ஒன்றை துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறையும் பிறப்பித்து உள்ளது. முன்பதிவு செய்த நாளை தாண்டி விருந்தினர்கள் தங்க நேர்ந்தால், எந்த அறையில் முன்பதிவு செய்து இருந்தினரோ அதே அறையில் தொடர்ந்து தங்க அனுமதிக்க வேண்டும். அசாதாரண சூழலில் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என ஹோட்டல்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதனால், விமானங்கள் ரத்து செய்யப்பட்ட போதிலும் துபாய் அபுதாபி நகரங்களில் சிக்கி தவித்தவர்கள், கூடுதல் செலவுகளில் இருந்து தப்பினர்.
வழக்கமாக இது போன்ற நெருக்கடிகளின் போது விமான நிலையங்களில் பயணிகள் காத்திருப்பது, படுத்து உறங்குவது போன்ற காட்சிகளை காண முடியும்.ஆனால் இவ்வளவு பெரிய நெருக்கடி ஏற்பட்டபோதும் துபாய் அபுதாபி விமான நிலையங்களில் அத்தகைய பிரச்னை எதுவும் ஏற்படவில்லை. துபாய், அபுதாபி அரசு நிர்வாகத்தினரின் செயல் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளது.

