அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்களுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு
அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்களுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு
ADDED : அக் 04, 2024 03:53 AM

வாஷிங்டன்: அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிலிப் கார்டான் ஆகியோரை, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சந்தித்து பேசினார்.
அமெரிக்கா சென்றுள்ள நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐ.நா., பொது சபை கூட்டத்தில் பங்கேற்று பேசிய பின், அமெரிக்க அதிபர் பைடனின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள், அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்து பேசி வருகிறார்.
கடந்த 1ம் தேதி அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கனை சந்தித்து பேசினார்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது, பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்களை நெருக்கமாக ஒருங்கிணைத்தல் மற்றும் முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனை, அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.
அதன்பின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், 'ஜேக் சல்லிவன் உடனான சந்திப்பு எப்போதும் போலவே ஆக்கப்பூர்வமான பேச்சாக அமைந்தது. இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் உலக அரசியல் குறித்தும் உரையாடினோம்' என, ஜெய்சங்கர் குறிப்பிட்டுஉள்ளார்.
இதை தொடர்ந்து, அமெரிக்க துணை அதிபரும், தற்போதைய அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிலிப் கார்டானை சந்தித்து ஜெய்சங்கர் பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து கார்டான் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 'வளர்ந்து வரும் நம் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உட்பட, அமெரிக்க- - இந்திய உறவில் முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம்.
'இந்தோ - பசிபிக், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய பிராந்திய பாதுகாப்பு பிரச்னைகள் குறித்தும் பேசப்பட்டது' என, குறிப்பிட்டுள்ளார்.