ரஷ்யாவுடன் பேசி தீர்வு காணுவோம் உக்ரைன் அதிபரிடம் அமெரிக்கா உறுதி
ரஷ்யாவுடன் பேசி தீர்வு காணுவோம் உக்ரைன் அதிபரிடம் அமெரிக்கா உறுதி
ADDED : ஆக 19, 2025 07:34 AM
வாஷிங்டன் : ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது 2022ல் ரஷ்யா போர் தொடுத்தது.
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் சண்டையை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் முயன்று வருகின்றன.
அந்த வகையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், அமெரிக்காவின் அலாஸ்காவில், அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 15ல் பேச்சு நடத்தினார். இதில், எந்த முடிவும் எட்டப்படவில்லை.
உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி, வெள்ளை மாளிகையில் டிரம்பை நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார். அப்போது, புடின் - டிரம்ப் உடனான முத்தரப்பு சந்திப்புக்கு அவர் சம்மதம் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த டிரம்ப், இந்த முடிவு குறித்து ரஷ்ய அதிபர் புடினுடன் பேசுவதாக உறுதியளித்தார்.
உக்ரைனின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என கூறிய டிரம்ப், இதற்காக ஐரோப்பிய பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா ஆதரிக்கும் என்றார்.
ஜெலன்ஸ்கியை தொடர்ந்து, அவருடன் சென்ற ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் டிரம்ப் ஆலோசனை நடத்துகிறார்.

