கைதான இந்தியரை நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் தடை
கைதான இந்தியரை நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் தடை
ADDED : மார் 22, 2025 05:22 AM

நியூயார்க் : பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாக, அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட ஜார்ஜ்டவுன் பல்கலையில் ஆய்வு படிப்பு படிக்கும் இந்திய மாணவர் பதர் கான் சுரியை நாடு கடத்த, அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அமெரிக்காவின், ஜார்ஜ்டவுன் பல்கலையில் இயங்கும் அல்வலீத் பின் தலால் முஸ்லிம் -- கிறிஸ்துவர்கள் புரிந்துணர்வு மையத்தில் முதுநிலை ஆராய்ச்சி மாணவராக இருப்பவர் பதர் கான் சுரி. இந்நிலையில், அமெரிக்க குடியேற்றத் துறையினர் கடந்த 17ம் தேதி விர்ஜினியாவில் பதர் கான் சுரியை கைது செய்தனர். ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இவர் சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
மேலும், ஹமாஸ் அமைப்புக்கு ஆலோசனை வழங்கும் முக்கிய பயங்கரவாதி ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது. ஆகையால் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் பணியை அதிகாரிகள் துவங்கினர்.
இதற்கு எதிராக பதர் கான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, பதர் கானை நாடு கடத்தக்கூடாது என உத்தரவிட்டார்.