ADDED : ஆக 27, 2025 11:40 PM
போகோட்டா:தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், சில கிராமப்புறங்களில் பாதுகாப்பை பராமரிக்க அந்நாட்டு அரசு திணறி வருகிறது. அங்கு போதைப் பொருள் கடத்தல் கும்பல்களும், ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களும் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர்.
சமீபத்தில், குவாரியார் மாகாணத்தில் உள்ள எல் ரெட்டோர்னோ என்ற பகுதியில், ராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடந்தது. இதில், 10 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், எல் ரெட்டோர்னோ பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த 34 ராணுவ வீரர்களை, கிளர்ச்சியாளர்கள் உத்தரவுப்படி, அப்பகுதி மக்கள் கடத்தி சிறை பிடித்துள்ளதாக ராணுவ அமைச்சர் பெட்ரோ சான்செஸ் நேற்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், ''இது ஒரு சட்ட விரோத நடவடிக்கை. ராணுவ வீரர்களை மீட்க அரசு எந்த எல்லைக்கும் செல்லும். ராணுவ வீரர்களை சிறை பிடித்து வைத்திருக்கும் கிராம மக்கள், கொல்லப்பட்ட கிளர்ச்சியாளரின் உடலை தரும்படி கோருகின்றனர்,'' என்றார்.