பொறுப்பற்ற தாக்குதல்; ஈரானுக்கு மேற்காசிய நாடுகள் கண்டிப்பு
பொறுப்பற்ற தாக்குதல்; ஈரானுக்கு மேற்காசிய நாடுகள் கண்டிப்பு
UPDATED : மார் 03, 2026 07:23 AM
ADDED : மார் 03, 2026 07:14 AM

ரியாத்: பொறுப்பற்ற தாக்குதல் என்று ஈரானை கண்டித்து அமெரிக்கா மற்றும் மேற்காசியாவில் உள்ள ஆறு நாடுகள் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.
மேற்காசியாவில் உள்ள ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதலை தொடங்கின. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான், மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்கி வருகிறது. இதனால் பல நாடுகள் வான்வெளியை மூடியுள்ளன, விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அமெரிக்கா உடன் இணைந்து பஹ்ரைன், ஜோர்டான், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள், கடும் கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில், 'ஈரான் பொறுப்பற்ற ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல்கள் பல நாடுகளின் இறையாண்மைக்கு எதிரானவை. பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாகவும், உள்கட்டமைப்புக்கு சேதம் விளைவிக்கும் விதமாகவும் இந்த தாக்குதல் உள்ளது. 'போரில் ஈடுபடாத நாடுகளை தாக்கியது, நம்பிக்கையை சீர்குலைக்கும் செயல்.
எங்கள் குடிமக்கள், இறையாண்மை, நாட்டை பாதுகாக்க ஒன்றிணைந்து நிற்கிறோம். இத்தாக்குதல்களுக்கு எதிராக சுயபாதுகாப்பு உரிமையை உறுதிப்படுத்துவோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

