ஒரு லட்சம் டாலர் கட்டணம் யாருக்கு? அமெரிக்க அரசு விளக்கம்
ஒரு லட்சம் டாலர் கட்டணம் யாருக்கு? அமெரிக்க அரசு விளக்கம்
UPDATED : செப் 21, 2025 12:12 PM
ADDED : செப் 21, 2025 08:57 AM

வாஷிங்டன்: ''தற்போது 'எச்1பி' விசா வைத்திருக்கும் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஒரு லட்சம் டாலர் கட்டணம் என்பது புதிய விசா கோரும் விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும்'' என்று அமெரிக்கா தெளிவுபடுத்தி உள்ளது.
அமெரிக்காவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் மென்பொருள் உள்ளிட்ட திறன் வாய்ந்த துறைகளுக்கு தேவையானவர்கள் கிடைக்காத நிலையில், 1990களில் அறிமுகம் செய்யப்பட்டது தான், எச்1பி விசா முறை. இதன்படி, இந்தியா, சீனா உட்பட வெளிநாடுகளில் இருந்து திறன் வாய்ந்தவர்கள் வேலைக்கு கிடைத்தனர்.
சாதாரணமாக எச்1பி விசா என்பது முதலில் மூன்று ஆண்டுக்கு வழங்கப்படும். அதன்பின், ஆறு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும். அதே நேரத்தில் கிரீன் கார்டு பெற்றவர்கள் வாழ்நாள் முழுவதும் புதுப்பித்துக் கொள்ளலாம்
ஜனவரியில் அதிபராக பதவியேற்ற டிரம்ப், சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவரை திருப்பி அனுப்ப முடிவு செய்தார். புதிதாக வருபவர்களையும் குறைக்க விசா நடைமுறைகளை கடுமையாக்கினார். தற்போது 'எச்1பி' விசா திட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். புதிய உத்தரவு மூலமாக எச்1பி விசாவுக்கான கட்டணத்தை, 1 லட்சம் டாலராக (ரூ. 88 லட்சம்) உயர்த்தியுள்ளார். தற்போது இந்த கட்டணம் 4 லட்சம் ரூபாய்க்கும் குறைவாகவே உள்ளது.
கடந்தாண்டு வழங்கிய எச்1பி விசாக்களில், 71 சதவீதம் இந்தியர்களே பெற்றனர். அடுத்து, சீனர்கள் 11.7 சதவீதம் பெற்றனர். அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ள இந்தியர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது. இந்த புதிய விதிகள், ''தற்போது 'எச்1பி' விசா வைத்திருக்கும் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஒரு லட்சம் டாலர் கட்டணம் என்பது புதிய விசா கோரும் விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும்'' என்று அமெரிக்கா தெளிவுபடுத்தி உள்ளது.
ஏற்கனவே விசா வைத்திருப்பவர்கள் எப்போதும் போல வெளிநாடுகளுக்கு சென்று விட்டு மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்ப வர முடியும். நேற்று வெளியிடப்பட்ட உத்தரவால் தற்போது வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.