ADDED : அக் 26, 2025 10:26 PM

பீஜிங் : உலகின் அதிவேக புல்லட் ரயிலின் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தி சீனா புதிய சாதனை படைத்துள்ளது.
மக்களின் தேவைகளுக்கு ஏற்ப உலக நாடுகள் தொழில்நுட்பத்தையும் வளர்த்து வருகின்றன. அதிலும் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான் உள்ளிட்டவை அதிவேக புல்லட் ரயில்களை இயக்கி வருகின்றன. ஜப்பானின் எல்.ஓ., சீரிஸ் மாக்லேவ் ரயில் மணிக்கு 603 கி.மீ., வேகத்தில் பயணித்து சாதனை படைத்திருந்தது. அதனை முறியடிக்கும் வகையில், மணிக்கு 896 கி.மீ., வேகத்தில் இயங்கக்கூடிய 'சி.ஆர்.,- 450' என்று பெயரிடப்பட்ட ரயிலை சீனா உருவாக்கியுள்ளது.
அந்த ரயில் சீனாவின், ஷாங்காய் - செங்டு வழித்தடத்தில் இயக்கப்பட இருக்கிறது. 'சி.ஆர்., - 450' புல்லட் ரயில் தொழில்நுட்ப ரீதியில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரயில் எஞ்சினின் முனைப் பகுதி பருந்து அலகு போன்ற ஏரோடைனமிக் வடிவத்தில் 45 அடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வேகத்தை மேம்படுத்த, ரயிலின் ஒட்டுமொத்த காற்று எதிர்ப்பை 22 சதவீதம் குறைத்துள்ளனர். 20 சென்ட்டிமீட்டர் அளவுக்கு ரயிலின் மேற்கூரை உயரம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் முந்தைய மாடலான 'சி.ஆர்., - 400' காட்டிலும் 55 டன்கள் எடை குறைவானது. இந்த ரயில் வெறும் 4 நிமிடங்கள் 40 வினாடிகளில் 350 கி.மீ., வேகத்தை எட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எதிரெதிர் திசையில் இரண்டு 'சி.ஆர்., - 450' புல்லட் ரயில்களை சோதனை செய்தபோது, ரயிலின் வேகம் மணிக்கு 896 கிலோமீட்டராக இருந்தது. என்றாலும் வணிக ரீதியாக 400 கி.மீ., மட்டுமே ரயில் இயக்கப்பட உள்ளது.பொறியியல் ஆய்வு மற்றும் பாதுகாப்பு அனுமதி இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில், சோதனை ஓட்டத்திற்கு பின், 'சி.ஆர்., - 450' ரயில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

