
புது தில்லி : அக்னி நட்சத்திரத்தின் கடும் வெயிலில், அதன் தோஷம் குறைந்து டில்லி மாநகரம் குளிர் பெறவும், உலகம் நன்மை பெறவும், சாலிமார் பாக்கில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாக்ஷி கோவிலில் காலை கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, சங்கல்பம், புண்யாஹவசனம், கலச ஸ்தாபனம், லகுன்யாஸ ஸ்தோத்திரம், ஏகாதச ருத்ர ஜபம், ஸ்ரீருத்ரநாம த்ரிஸதீ நாமார்ச்சனை நடைபெற்றது. எஸ். கே. மூர்த்தி வாத்தியார் தலைமையில் ரித்விக்குகள் இதில் பங்கேற்று பதினொரு ஆவர்த்தி ஏகாதச ருத்ரம் பாராயணம் செய்தனர்.
இதையடுத்து, பூஜிக்கப்பட்ட கலசத்தில் இருந்த புனித நீரினை எடுத்து மீனாக்ஷி சமேத சுந்தரேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் சன்னதிகள் சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்