/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
ஆக., 27 ல் விநாயகசதுர்த்தி விழா - 2025
/
ஆக., 27 ல் விநாயகசதுர்த்தி விழா - 2025

விநாயகசதுர்த்தி என்பது இந்துக்களின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது.
விநாயகர் ஹேரம்ப, ஏகதந்த, கணபதி, விநாயகர் மற்றும் பிள்ளையார் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். விநாயகர் சதுர்த்தி, கணேஷ் பூஜை என்பது நாட்டில் பரவலாகக் கொண்டாடப்படும் இந்து பண்டிகைகளில் ஒன்றாகும் . விநாயகர் அதிர்ஷ்டத்தை அளிப்பவராகவும், இயற்கை பேரழிவுகளைத் தவிர்க்க உதவக்கூடியவராகவும் அறியப்படுகிறார். அவர் பயணத்தின் புரவலர் கடவுளாகவும் உள்ளார். விநாயகர் மனித உடலில் யானைத் தலையுடன் சித்தரிக்கப்படுகிறார். இந்து பழக்க வழக்கங்களின்படி, விநாயகர் சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகன் ஆவார்.
ஆவணி மாத அமாவாசைக்குப் பிறகு, நான்காவது நாளில், பக்தர்கள் பதினொரு நாட்கள் கொண்டாட்டங்களைத் தொடங்குகிறார்கள். பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. புதிய விநாயகர் சிலையை வாங்கி, அதற்கு 3 நாட்கள் முதல் ஒரு வாரம் வரை பூஜை செய்து நீர்நிலைகளில் கரைத்து விடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
விநாயகப்பெருமானுக்கு மிகவும் விருப்பமானதாகக் கருதப்படும் மோதகங்கள், லட்டுகள் மற்றும் பிற இனிப்புகள் தயார் செய்யப்பட்டு, விநாயகர் பந்தல்களுக்கு முன்வைத்து பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன.
புதிய தொழில்நுட்பத்தின் வருகையுடன், விநாயகர் சிலைகள் நகரும் கைகள் மற்றும் தலைகளைக் கொண்டிருப்பதைக் காணலாம். இந்த விழாவின் போது விநாயகர் சிலைகளைக் காட்சிப்படுத்தும் கண்காட்சிகளும் நடைபெறுகின்றன.
திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டியில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் கோயில் ஆகியவற்றில் பிரமாண்டமான கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் தண்ணீரில் கரைந்து விடுவதை போன்று, மனிதர்களாகிய நமக்குள் இருக்கும் தீய எண்ணங்களையும், குணங்களையும், செயல்களையும் நாம் விட்டொழிந்துவிட வேண்டும் என்பதையே இந்த வழக்கம் நமக்கு உணர்த்துகிறது.
கலைநிறை கணபதி சரணம் சரணம்!
கஜமுக குணபதி சரணம் சரணம்!
தலைவநின் இணையடி சரணம் சரணம்!
சரவண பவகுக சரணம் சரணம்!
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்
