நொய்டா கோவிலில் பக்தர்களுக்கு வெள்ளை கம்பளம் வரவேற்பு
நொய்டா கோவிலில் பக்தர்களுக்கு வெள்ளை கம்பளம் வரவேற்பு
மே 29, 2026

நொய்டா செக்டர்-62 பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில், கோடை கால வெப்பத்திலிருந்து பக்தர்களையும் விக்ரஹங்களையும் பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகளை செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
கொளுத்தும் வெயிலை கருத்தில் கொண்டு, கோவில் நிர்வாகம் முதன் முறையாக ஒரு புதிய முயற்சியை இக்கோவில் வளாகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. நுழைவு வாயிலில் இருந்து பிரதான சன்னதி வரை பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில், வெப்பத்தை குறைக்கும் தன்மை கொண்ட சிறப்பு எலாஸ்டோமெரிக் பெயிண்ட் பூசப்பட்டுள்ளது. உடல் உராய்வைத் தாங்கக்கூடிய இந்தப் பூச்சு, தரையின் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோவில் வளாகத்திற்குள் நுழைந்து, தெய்வ சன்னதியை அடைய பக்தர்கள் சுமார் நாற்பது அடிகள் நடக்க வேண்டியுள்ளது. வெயிலின் தாக்கம் இல்லாமல், கால்களுக்கு குளிர்ச்சியுடன் மற்றும் சுகமாக நடக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய முயற்சியை பக்தர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
இதனுடன், கோவில் அர்ச்சகர்களான மணிகண்டன் சர்மா மற்றும் மோஹித் மிஸ்ரா ஆகியோர் தினமும் காலை அனைத்து விக்ரஹங்களுக்கும் குளிர்ந்த பால், நீர், பச்சைக் கற்பூரம் மற்றும் சந்தனப் பொடி சேர்த்து அபிஷேகம் செய்து வருகின்றனர்.
மேலும், பக்தர்கள் குளிர்ந்த நீர் அருந்துவதற்காக கோவில் வளாகத்தில் தண்ணீர் குளிரூட்டும் கருவியும் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் நலனையும் வசதியையும் முன்னிலைப்படுத்திய இந்த நடவடிக்கைகள் அனைவராலும் வரவேற்கப்படுகின்றன.
- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்
