/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
பழங்குடியின சமூக 'நம்பிக்கை நட்சத்திரம்'
/
பழங்குடியின சமூக 'நம்பிக்கை நட்சத்திரம்'
ADDED : மார் 10, 2025 12:26 AM

பழங்குடியினர் என்றால் வனப்பகுதியில் வசிப்பவர்கள், தேன் விற்று பிழைப்பு நடத்துபவர்கள், கல்வியறிவில் பின்தங்கியவர்கள் என்று தான் கேள்விபட்டு இருப்போம். தற்போது பழங்குடியினர் சமூகத்தில் இருந்து கல்வியிலும், சமூக சேவையிலும் நிறைய பேர் சாதித்து வருகின்றனர். இவர்களில் ஒருவரான ஆஷாவின் வாழ்க்கை பயணத்தை பார்க்கலாம்.
மைசூரின் எச்.டி.கோட்டே தாலுகாவில் வனப்பகுதியை ஒட்டி உள்ள அங்கநாதபுரா கிராமத்தில் பிறந்தவர் ஆஷா, 33. பழங்குடியினர் சமூகத்தின் 'யரவா' பிரிவை சேர்ந்தவர். ஆஷாவுக்கு 3 வயது இருக்கும்போது, அவரது தந்தை, குடும்பத்தை தவிக்க விட்டு எங்கேயோ சென்று விட்டார்.
இதனால் ஆஷாவை அவரது தாய் ஜெயம்மா கஷ்டப்பட்டு வளர்த்தார். ஆஷாவுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னை இருந்தது. ஆனால் அதை பெரிய விஷயமாக கண்டு கொள்ளவில்லை. அங்கநாதபுரா கிராமத்தில் அரசு பள்ளியில் 10 வரை படித்தார். மேற்கொண்டு படிக்க விரும்பிய போது, அவரது சமூகம் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் எதிர்ப்பையும் மீறி பி.யு., முடித்து, பட்டப்படிப்பு படித்தார்.
மைசூரு மானசகங்கோத்ரியில் சமூக பணி பாடத்தில் முதுகலை பட்டமும் பெற்றார். பின், சில தனியார் நிறுவனங்களில் குழந்தைகள் நல ஆலோசகராகவும், மனிதவள நிர்வாகியாகவும் பணியாற்றினார். பின், மைசூரில் பழங்குடி ஆராய்ச்சி நிறுவன ஆய்வாளராக மூன்று ஆண்டுகள் பணி செய்தார்.
கடந்த 2022ல் அங்கநாதபுரா கிராமத்தில் அறக்கட்டளை துவக்கினார். இந்த அறக்கட்டளை மூலம் பழங்குடியின சமூக வாலிபர்கள், இளம்பெண்களுக்கு தன்னம்பிக்கை, தலைமைத்துவம், உயர்கல்வி கல்வி கற்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். பழங்குடியின சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார்.
- நமது நிருபர் -