'முதல் சம்பளம் வாங்கியதை மறக்கவே மாட்டேன்' நினைவுகூரும் துாய்மை பணியாளர்
'முதல் சம்பளம் வாங்கியதை மறக்கவே மாட்டேன்' நினைவுகூரும் துாய்மை பணியாளர்
ADDED : ஏப் 06, 2026 04:38 AM

- நமது நிருபர் -
பெங்களூரு நகரத்தை சுத்தமாகவும், அழகாகவும் வைப்பதில் ஜி.பி.ஏ.,வில் பணியாற்றும் துாய்மை பணியாளர்கள் பங்கு இன்றியமையாதது. வெயில், மழை பாராமல் உழைக்கின்றனர். ஆனால் துாய்மை பணியாளர்களை, சிலர் அவதுாறாக பேசி திட்டுவதும் உண்டு. இதை எல்லாம் பொறுத்து கொண்டு தங்கள் வேலையை செய்வோர் நிறைய பேர் உள்ளனர். இவர்களில் ஒருவர் சந்திரா.
ஜி.பி.ஏ.,வில் துாய்மை பணியாளராக இருக்கும் இவர், தனக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒரு குப்பை கூட இருக்க கூடாது என்பதில் கண்ணும், கருத்துமாக செயல்படும் நபராக உள்ளார்.
தனது வேலை குறித்து சந்திரா கூறியதாவது:
என் கணவர் பெயின்டர் வேலை செய்தவர். அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு படுத்த, படுக்கை ஆனார். குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்த அவரது நிலை என்னையும், எனது இரு மகன்களையும் பொருளாதார ரீதியாக பின்தள்ளியது.
இதில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று நினைத்தேன்.என் தந்தை கர்நாடக அரசில் ஊழியராக பணியாற்றியவர் என்பதால், சிலரது உதவியுடன் ஜி.பி.ஏ.,வில் ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளர் வேலை கிடைத்தது. முதல் மாத சம்பளம் வாங்கிய போது, உணர்ச்சிவசப்பட்டு அழுதேன். அந்த பணத்தில் எனது கணவருக்கு மருந்து வாங்கி சென்றது மறக்க முடியாத தருணம். அங்கிருந்து எனது குடும்ப பிரச்னைக்கு முடிவு கட்டலாம் என்ற நம்பிக்கை வந்தது. இரு மகன்களில் ஒருவர் படிக்கிறார். இன்னொருவர் வேலை செய்கிறார்.
விலைவாசி உயர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் குடும்பத்தில் ஒருவரை மட்டும் நம்பி இருந்தால், எதுவும் செய்ய முடியாது. என்னை பொறுத்தவரை நாம் செய்யும் வேலையை தெய்வமாக நினைக்க வேண்டும். வேலையில் பெரிய வேலை, சிறிய வேலை என்று எதுவும் இல்லை. தெருக்களை சுத்தம் செய்வதை, என் வீட்டை சுத்தம் செய்வது போன்று நினைக்கிறேன். சாலையை அழகுபடுத்தும் பணி எனக்கு கிடைத்ததை பாக்கியமாக கருதுகிறேன். பெண்கள் கண்டிப்பாக வேலைக்கு சென்று சுயசார்பு வாழ்க்கை வாழ வேண்டும். உழைப்பு தான் பெண்களுக்கு தைரியம் கொடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
