இயற்கை விவசாயத்தில் சக்கை போடு போடும் கிராமத்து பெண்
இயற்கை விவசாயத்தில் சக்கை போடு போடும் கிராமத்து பெண்
ADDED : ஏப் 06, 2026 04:38 AM

- நமது நிருபர் -
தாவணகெரே மாவட்டம், ஹரிஹரா தாலுகா நிட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சரோஜா பாட்டீல், 65. விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். அடிப்படையில், இவரும் ஒரு விவசாயியே. இவர் தனது சிறுவயதில் இருந்தே நிலத்தில் இறங்கி வேலை பார்த்தவர். இதனால், விவசாயத்தில் அனைத்து விஷயங்களும் அத்துப்படி.
விவசாயத்தில் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும். வாழ்க்கையில் நாமும் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்து இருந்தாலும், வாழ்க்கையில் பெரிய இடத்திற்கு வர வேண்டும் என நினைத்தார்.
இதற்கு இவரது கணவர் நாகேந்திரப்பாவும் பெரிதாக உதவினார். இவருடைய கணவரது 25 ஏக்கர் தோட்டத்தில் விவசாய வேலைகளை கண்காணித்து வந்தார் சரோஜா.
வரவேற்பு இதனிடையே, குடும்பத்தில் ஏற்பட்ட சிறு பிரச்னையால் நாகேந்திரப்பாவும், சரோஜாவும் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிக்கு சென்றனர். அப்போது, கயிறு தயாரிப்பது குறித்த பல விஷயங்களை அறிந்து கொண்டனர்.
இதை வைத்து கொண்டு இவர்கள் இருவரும் தேங்காய் நார் கயிறு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 2010ல் வீட்டிலே சிறிய அளவிலான கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்கினர். ஆனால், அது கைகொடுக்கவில்லை. நஷ்டத்திலேயே வியாபாரம் சென்றது.
அச்சமயத்தில், சரோஜா, நாம் ஏன் விவசாயம் செய்த பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என நினைத்தார். இதன் விளைவாக, தனது வீட்டிலே பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை விற்கத் துவங்கினார். இதற்கு, நல்ல வரவேற்பு கிடைத்தது. சிறுதானியங்கள் போன்றவற்றையும் விற்பனை செய்ய துவங்கினார்.
தங்கள் நிலத்தில் அறுவடை செய்யப்பட்ட தானியங்களை பாக்கெட் செய்து விற்க துவங்கினார். இந்த தானியங்கள் அனைத்தும் இயற்கை முறையில் செய்யப்பட்டவை. பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படாதவை.
தொழில் முனைவோர் இதை அறிந்த வேளாண் துறை அதிகாரிகள் சரோஜாவை நேரில் சென்று சந்தித்தனர். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தனர். இயற்கை விவசாயம் குறித்து மற்ற விவசாயிகளிடம் நீங்கள் உரையாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். இதனால், சரோஜாவும் வேளாண் துறை அதிகாரிகளுடன், அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று தன் தோட்டத்தில் விளைவிக்கும் முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.
இது, அவருக்கு அப்பகுதியில் செல்வாக்கை ஏற்படுத்தியது. 2014ல் புதிய அவதாரம் எடுத்தார். 'தத்வனம்' என்ற பெயரில் நிறுவனத்தை துவங்கினார். இந்த நிறுவனம் மூலம், தன் தோட்டத்தில் விளைந்த சிறு தானியங்களை பாக்கெட் செய்து விற்க துவங்கினார். மேலும், தானியங்கள் மூலமாக செய்யப்படும் அப்பளம், சேமியா போன்றவற்றை வீட்டிலே தயாரித்து பாக்கெட் செய்து விற்பனை செய்தார். இதற்கு, பலரிடமும் வரவேற்பு கிடைத்தது.
இந்த தொழில் அவருக்கு படிப்படியாக கைகொடுத்தது. 2020ல் வேறு மாநிலங்களில் நடக்கும் விவசாய கண்காட்சிகளில் பங்கேற்றார். அப்போது, தன்னுடைய 'ஆர்கானிக்' தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்த்தார். தனது தொழிலை விரிவுபடுத்தினார்.
சில ஆண்டுகளுக்கு முன், 'ஆன்லைனில்' தனது வியாபாரத்தை கொண்டு வந்தார். மேலும், மிக்சர், அவல் போன்றவற்றை பாக்கெட் செய்து விற்பனை செய்தார். இதன் சுவை வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றது. தற்போது, இவரிடம் 50க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்க்கின்றனர்.
இதுவரை, விவசாயியாக இருந்த சரோஜா தொழில் முனைவோராக உருமாறினார். இவரிடம் 500க்கும் மேற்பட்ட பெண்கள் தொழில் தொடங்குவது குறித்து ஆலோசனை கேட்டு சென்று உள்ளனர். இவர்களுக்கு இலவசமாகவே ஆலோசனைகள் வழங்கி வருகிறார். தற்போது, சரோஜா மாதம் 50,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.
இந்த பயணம் குறித்து சரோஜா கூறியதாவது:
இயற்கை விவசாயம் என்ற கருத்து உலகின் மூலைமுடுக்கெல்லாம் சென்றடைய வேண்டும். அதுவே என்னுடைய விருப்பம். ரசாயனம் கலந்த உணவை உட்கொள்வதைத் தவிர்க்க, நகரவாசிகள் இயற்கை விவசாயம் செய்து, தங்களுக்குத் தேவையான காய்கறிகளைத் தாங்களே பயிரிட வேண்டும். ஒவ்வொரு மனிதரும் ஆரோக்கியமாக உண்டு வாழ வேண்டும். கிராமத்தில் பிறந்தாலும், சரியான வழியில் கடுமையாக உழைத்தால், யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
