தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/ஆடவள் அரங்கம்/ 2 மாணவர்கள் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றிய ஆசிரியை

2 மாணவர்கள் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றிய ஆசிரியை

2 மாணவர்கள் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றிய ஆசிரியை


ADDED : செப் 01, 2025 03:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2025 03:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரசு ஆசிரியர் என்றால் நேரத்திற்கு பள்ளிக்கு செல்வது, ஒழுங்காக பணி செய்யாமல் இருப்பது போன்ற பொதுவான கருத்துகளுக்கு அப்பாற்பட்டவர் இவர். கடமைக்கு பாடம் கற்பிப்பவர்கள் மத்தியில் கடமையே பாடம் கற்பிப்பது என்பதை நிரூபித்து வரும் ஆசிரியை பற்றியது இக்கட்டுரை.

ஷிவமொக்கா மாவட்டம், சாகர் தாலுகாவில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியை ஜெயந்தி, 47. இவர் தன் மாணவ - மாணவியரிடம் இயல்பாக பழக கூடியவர். இதனால், இவரது வகுப்புகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பாடத்தை கற்று கொள்வர். இது ஜெயந்திக்கும் மாணவர்களுக்கும் இடையேயான உறவை மேம்படுத்தியது.

ஜெயந்தி, மாணவர்களுடன் வகுப்பறையில் மட்டும் கலந்துரையாடுவதில்லை. வீதிகளில் மாணவர்களை சந்திக்கும் போது, அவர்களின் நலம் விசாரிக்க தவறுவதில்லை. இப்படிப்பட்டவர், பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல முயற்சிகள் செய்து வருகிறார். வீடு, வீடாக சென்று பள்ளிக்கு செல்லாத மாணவர்களின் பெற்றோரிடம் கலந்துரையாடி, கல்வியின் மகத்துவத்தை எடுத்து கூறி அவர்களை பள்ளியில் சேர்த்து வருகிறார்.

சபாஷ் இவரது முயற்சியை கிராம மக்கள், சக ஆசிரியர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். மற்ற ஆசிரியர்களுக்கு முன் மாதிரியாக திகழ்கிறார். மாணவர் சேர்க்கைக்கு ஜெயந்தி பல முயற்சிகள் செய்தாலும், அவர் சமீபத்தில் செய்த காரியம், மற்றவர்களின் புருவத்தை உயர்த்தும் வகையில் உள்ளது.

இவர் பணிபுரியும் அரசு பள்ளியில் படித்த அண்ணன் - தங்கையான, ஐந்தாம் வகுப்பு மாணவர் சுஷான், மூன்றாம் வகுப்பு மாணவி ஷான்வி கடந்த சில வாரங்களாக பள்ளிக்கு வரவில்லை. இதை அறிந்த ஜெயந்தி, சில நாட்களுக்கு முன் மாணவர்களின் வீட்டுக்கே சென்றார்.

இவர்களின் வீடு, ஹொசநகர் தாலுகாவில் உள்ள சம்பேக்கட்டே அருகே உள்ள கும்பரகோலி மலைக்கிராமத்தில் இருப்பது தெரிந்தது. கடந்த வாரம் இவர்களை பார்ப்பதற்காக 80 கி.மீ., பயணம் செய்து, அவர்கள் வீட்டுக்கே சென்றார். அங்கு அவர்கள் பெற்றோரை சந்தித்தார். அவர்களிடம் கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்தார். வீட்டு கஷ்டம், நீண்ட துாரம் பயணம் என கூறி பிள்ளைகளின் படிப்பை பாழாக்காதீர்கள் என கையெடுத்து கும்பிட்டார்.

பாராட்டு இதை பார்த்த, மாணவர்களின் பெற்றோரின் நெஞ்சமும் கரைந்தது. அவர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப சம்மதம் தெரிவித்தனர். இந்த செய்தியை அறிந்த மாவட்ட கல்வி அதிகாரி, ஜெயந்தியை நேரில் அழைத்து மனமார பாராட்டி உள்ளார். இதைத்தொடர்ந்து, அவர் பணிபுரியும் பள்ளியின் முதல்வரான நுார் அஹமதும், தன் சொந்த செலவில் மொத்தம் 160 கி.மீ., பயணம் செய்த ஆசிரியை ஜெயந்தியை பாராட்டினார்.

இது குறித்து ஜெயந்தி கூறியதாவது:

இரண்டு மாணவர்களும் பள்ளிக்கு வந்து பல நாட்கள் ஆகிவிட்டன. அது பற்றி விசாரித்த போது, இருவரும் பள்ளியில் இருந்து நின்றுவிட்டதாக கூறப்பட்டது. மாணவர்களின் வீட்டு முகவரி இருந்த போதும், அவர்கள் வீட்டை கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது. இரண்டு மாணவர்களின் வாழ்க்கையில் கல்வியை தொடர உதவி உள்ளேன். இந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. இதுபோன்ற பணிகளை தொடருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்

- நமது நிருபர் - .

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us