ADDED : ஏப் 20, 2026 02:10 AM

- நமது நிருபர் -:
பெரும்பாலான பெண்கள் திருமணத்துக்கு பின், வேலை, தங்கள் கனவை மறந்து, குடும்பத்தை கவனிப்பர். சிலர், இரண்டையும் சமமாக கொண்டு செல்வர். இன்று நாம் பார்க்க போவது, இரண்டாவது ரகத்தை சேர்ந்தவர்.
உடுப்பியை பூர்வீகமாக கொண்டவர் ஸ்ரீமதி. சிறுவயதில், யக் ஷகானா குழுவினரின் நாடகங்களை பார்த்து வளர்ந்ததாலும், அவரின் தந்தை மேளத்தை பழுது பார்ப்பது அல்லது சீரமைக்க உதவி செய்வது என இருந்தார்.
கணவருக்கு உதவி எலக்ட்ரானிக்ஸ் - கம்யூனிகேஷனில் டிப்ளமோ முடித்த இவர், மைசூரை சேர்ந்த ஆயுர்வேத டாக்டர் அருண் குமாரை திருமணம் செய்து, மைசூரு வித்யாரண்யபுராவில் செட்டிலாகிவிட்டார். கணவரின் பிரானிக் ஹீலிங் சிகிச்சை முறையை பார்த்த, அதன் தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டு, கணவருக்கு உதவியாக கிளினிக்கில் பணியாற்றி வந்தார்.
செண்டை மேளம் குழு அமைத்தது குறித்து ஸ்ரீமதி கூறியதாவது:
தினமும் பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததும், மண்டார்தி குழுவினரின் உடையை தைக்க குடும்பத்திற்கு உதவுவோம்.
ஆனால் யக் ஷ கானா ஆண்களின் கோட்டையாக கருதப்பட்டதால், பெண்கள் அவற்றை அணியவோ அல்லது அந்த கலை வடிவத்தை கற்கவோ ஒரு போதும் அனுமதிக்கப்படவில்லை. கோவில்களில் நடக்கும் இந்நிகழ்ச்சியை பார்க்க மட்டுமே செல்வேன்.
என் இளைய மகன் விஷ்ருத்தின் பள்ளி மூலமாக இந்த கலையை கற்கும் வாய்ப்பு கிடைத்தது. மைசூரில் உள்ள அறிவு பள்ளியில் ஆண்டுதோறும் நடக்கும், 'அறிவு ஹப்பா'வை, தங்கள் பிள்ளைகளுடன் பெற்றோர் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
முதல் ஆண்டு நான் பங்கேற்கவில்லை. இரண்டாம் ஆண்டில் இருந்து வீரகாசே, பட்டட குனிதா, டொல்லு குனிதா போன்ற கலை வடிவங்களை கற்க துவங்கினேன். நான் எப்போதுமே புதிதாக எதையாவது முயற்சி செய்ய விரும்பினேன்.
செண்டை மேளம் மைசூரில் உள்ள கராவளி யக் ஷகானா கேந்திராவில், நானும் என் மகன் விஷ்ருத்தும் யக் ஷகானா கற்றுக் கொண்டிருந்தோம். அப்போது திவ்யா ஸ்ரீ நாயக், செண்டை கலையை கற்பித்து வந்தார். நான், என் வீட்டிற்கு வந்து பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தேன்.
ஆனால் அந்த முயற்சிக்கு தடைகள் ஏற்பட்டன. பங்கேற்பாளர்கள் படிப்படியாக விலகினர். பின், அந்த ஆசிரியையும் பெங்களூருக்கு குடியேறி விட்டார். பயிற்சி செய்வதற்கு ஓர் இடத்தை கண்டுபிடிப்பது மற்றொரு சவாலாக இருந்தது.
பாரம்பரியமாக கற்பவர்கள் தரையில் அடித்து பயிற்சி செய்வர். ஆனால், வீடுகளில் பளிங்கு தரை இருந்ததால், நாங்கள் பயிற்சியின் போது எழும் சத்தத்தால், எங்களை காலி செய்யுமாறு கூறினர்.
அறிவு ஹப்பாவுக்கு ஒரு வாரத்துக்கு முன் தான், எங்களுக்கு இசைக்கருவிகள் கிடைத்தன. ஆனால் பயிற்சி செய்ய இடம் கிடைக்கவில்லை.
இறுதியாக, எங்கள் பள்ளி அருகில் உள்ள ராகவேந்திரா பண்ணை, எங்களுக்கு அனுமதி அளித்தது. தினமும் இரண்டு மணி நேரம் செண்டை மேளம் பயிற்சி செய்தோம்.
முதல் நிகழ்ச்சி கடந்த 2023 ஜனவரியில் அறிவு ஹப்பாவில், ஆண்கள், பெண்கள் அடங்கிய குழுவில் எங்கள் குழு முதன் முறையாக நிகழ்ச்சி நடத்தியது. தசரா பண்டிகையின் போது, சிக்க கடிகாரா உட்பட பல்வேறு இடங்களில், இரண்டு அல்லது மூன்று சிறுவர்களுடன் சேர்ந்து நாங்கள் ஐந்து பெண்கள் நிகழ்ச்சி நடத்தினோம். மைசூரு அரண்மனையில் நடந்த கிருஷ்ண உத்சவம் போன்ற கோவில் திருவிழாக்களிலும், நாங்கள் வாசித்தோம். 2023 செப்டம்பரில் சாமுண்டி மலையின் உச்சியில் முதன் முறையாக செண்டை இசை நிகழ்ச்சியை நடத்தியது எங்கள் குழு தான்.
ஆரம்பத்தில் நாங்கள் மேகநாதா செண்டை பாலகா என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தினோம். பின் ஆண் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்ததால், ஸ்ரீதுர்காவாஹினி விருந்தா என்ற பெயரில் மகளிர் குழுவை உருவாக்கினோம்.
தற்போது அனைத்து நிகழ்ச்சிகளிலும் செண்டை மேளம் அனைவரையும் ஈர்க்கிறது. குறிப்பாக பெண்கள் வாசிக்கும் போது, அதிக வரவேற்பு கிடைக்கிறது.
செண்டை மேளம் வாசிப்பு தவிர, நாடகங்களிலும் நடிக்கிறோம். பி.ஜெயஸ்ரீக்கு பின், 'உரியோ உய்யாலே' என்ற தனிநபர் நாடகம், நீண்ட காலமாக அரங்கேற்றப்படவில்லை.
ரங்காயனா அறக்கட்டளையின் விகாஸ் சந்திராவின் கீழ், நாங்கள் எட்டு பேர் கதாபாத்திரங்களை பகிர்ந்து கொண்டு, 10 முதல் 12 காட்சிகளை அரங்கேற்றினோம். இதனை மூத்த கலைஞர் சசிகலா இயக்கியிருந்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
