இன்போசிஸ் பணியை விடுத்து விவசாயத்தில் சாதித்த பெண்
இன்போசிஸ் பணியை விடுத்து விவசாயத்தில் சாதித்த பெண்
ADDED : மார் 09, 2026 06:05 AM

- நமது நிருபர் -:
முதுகலை பட்டம் பெற்றிருந்தும், கணவரின் மனதை நோகடிக்க விரும்பாத பெண், கணவர் கூறியபடி விவசாயத்தில் ஈடுபட்டு, சாதனை புரிந்துள்ளார்.
ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கவிதா. உளவியலில் எம்.ஏ., முதுகலை பட்டத்தையும், கணினி அறிவியலில் டிப்ளமோவும் படித்தவர். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். 17 ஆண்டுகளுக்கு முன், அதே மாவட்டத்தை சேர்ந்த உமாசங்கருடன் திருமணம் நடந்தது.
உமாசங்கர், சொந்தமாக 43 ஏக்கர் நிலம் வைத்து விவசாயம் செய்து வருகிறார். கவிதாவின் படிப்புக்கு, இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து வேலை வாய்ப்பு கிடைத்தது. இது குறித்து தனது கணவரிடம் கவிதா தெரிவித்தார்.
அதற்கு அவரது கணவர், 'எங்கள் வீட்டில் அனைவரும் விவசாயம் செய்து வருகிறோம். நீயும் அதையே செய். என் 43 ஏக்கர் நிலத்தில் எட்டு ஏக்கர் நிலத்தை தருகிறேன்.
'அதில் விவசாயம் செய்து, உன் திறமையை காட்டு' என்று வற்புறுத்தி உள்ளார். கணவரின் மனதை நோகடிக்க விரும்பாத கவிதாவும், விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் ஒப்புக் கொண்டார். கணவர் கூறியபடி 8 ஏக்கர் நிலத்தை மனைவிக்கு வழங்கினார்.
விவசாயத்துக்கு தேவையானவை வாங்க, திருமணத்துக்கு பெற்றோர் வழங்கிய தங்க நகைகளை விற்று, அதில் கிடைத்த பணத்தில் விவசாயம் செய்ய துவங்கினார். இப்போது சந்தனம், ஆப்பிள், எலுமிச்சை என் பல்வேறு மரங்களால், மாதம் 20 முதல் 30 லட்சம் ரூபாய் வருவாய் பார்க்கிறார்.
தன் வெற்றி குறித்து கவிதா கூறியதாவது:
என் கணவர் எனக்கு தரிசு நிலத்தை தான் தந்தார். முதலில் இதில் என்ன விளைவிப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இருந்தாலும், நிலத்தை சுத்தம் செய்தேன். என் தங்க நகைகளை விற்று, அதில் கிடைத்த பணத்தில் மாநிலத்தில் சில நிபுணர்களின் ஆலோசனைப்படி விவசாயம் செய்தேன்.
எங்கள் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் பற்றாக்குறை இருந்தது. எனவே, பாரம்பரிய நெல் அல்லது கேழ்வரகு விளைவித்தால் தண்ணீர் அதிகம் தேவைப்படும். எனவே, பழங்களை விளைவித்தேன். இதனால் மழை காலத்தில் பெய்யும் மழையால் நான்கு மாதங்களுக்கு தாக்குபிடிக்கும். மீதி எட்டு மாதங்களுக்கு ஆழ்துளை கிணறு நீரை பயன்படுத்துகிறேன்.
ஆரம்பத்தில் மாதுளை விளைவித்தேன். இதில் ஓரளவு லாபம் கிடைத்தது. அதன் பின், நிரந்தர வருவாய் தரும் சந்தன மரங்களை நட தீர்மானித்தேன். இதற்காக, கர்நாடகா, தெலங்கானாவில் இருந்து பல்வேறு சந்தன மர செடிகளை வாங்கி நட்டுள்ளேன்.எங்கள் நிலத்தில் பல்வேறு பறவைகள், பாம்புகள் உள்ளன. அவைகளை நாம் தொந்தரவு செய்யாத வரை, அவை நம்மை எதுவும் செய்யாது. இதனால் பூச்சிகள், எலிகளின் தொந்தரவு இருந்ததில்லை.
மாம்பழம், கொய்யா, சீதாப்பழம், நெல்லிக்காய், எலுமிச்சை, தென்னை, முருங்கை மரம் என 8,000 பழ மரங்களும்; 800 தேக்கு மரங்களும் வளர்த்து வருகிறேன். சந்தன மரங்களை பாதுகாக்க, நாய்களை வளர்க்கிறோம்.
அது தவிர, மரங்களை வெட்டுவதை தவிர்க்க, சந்தன மரங்களில் 'சிப்'களை பொருத்தி உள்ளோம்.
இதனால், யாராவது திருட்டுத்தனமாக மரத்தை வெட்டினால், அதில் ஏற்படும் அதிர்வு, என் மொபைல் போனுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும். நாங்கள் செல்வதற்கு முன் மரங்களுடன் அவர்கள் தப்பித்துவிட்டாலும், கூட, மரத்தில் பொருத்தப்பட்டு உள்ள ஜி.பி.எஸ்., டிராக்கர் மூலம் கண்டுபிடித்துவிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விவசாயம் செய்ய விரும்புவோருக்கு உதவ தயாராக இருக்கும் இவரை, 88617 89787 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
