/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
வயதுக்கும், சாதனைக்கும் தொடர்பே இல்லை
/
வயதுக்கும், சாதனைக்கும் தொடர்பே இல்லை
ADDED : ஆக 11, 2025 04:37 AM

வயதுக்கும், சாதனைக்கும் தொடர்பே இல்லை. ஆர்வம், விடாமுயற்சியும், மன உறுதியும் இருந்தால் எந்த சாதனைகளையும் செய்யலாம். இதற்கு வயது தடையாக இருக்காது என்பதை, பலர் நிரூபித்துள்ளனர். இவர்களில் சுமதி ஷெட்டியும் ஒருவர். இவரது சாதனை அசாத்தியமானது.
தட்சிணகன்னடா மாவட்டம், மங்களூரு நகரின், பக்கிகெரே கிராமத்தில் வசிப்பவர் சுமதி ஷெட்டி, 80. இவருக்குள் அதிசயமான கலைத்திறன் மறைந்துள்ளது. தேவையற்ற கழிவு பொருட்கள், இவரது கைபட்டால் கலைப்பொருட்களாக மாறுகின்றன. தேங்காய் ஓடு, ஸ்ட்ரா, மரத்துண்டு, பிளாஸ்டிக் பாட்டில், பழைய டயர்கள் போன்ற தேவையற்ற பொருட்களை பயன்படுத்தி, அழகான கலை பொருட்களை தயாரிக்கிறார். இவரது வீட்டு காம்பவுண்ட் சுவர்கள் மீது அலங்கார பொருட்கள் வைத் திருக்கிறார்.
அலங்கார பொருட்கள் சுமதி ஷெட்டியின் வீட்டு வழியாக செல்வோர், இந்த அலங்கார பொருட்களை கண்டு வியக்காமல் இருக்கவே முடியாது. வீசி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களை வண்ணமயமான பூக்களாகவும்; தேங்காய் ஓடுகளுக்கு சாத்துக்குடி, மாம்பழ வடிவமும் கொடுத்துள்ளார். புற்களை பயன்படுத்தி கலை நயத்துடன் கூறிய கூடைகள் உருவாக்கியுள்ளார். மண்பானைகள், கண்ணாடி பாட்டில்களுக்கு வண்ணம் பூசி அலங்கார பொருட்களாக்கி உள்ளார்.
திருமணமான பின், 35 ஆண்டுகள் மும்பையில் வசித்தார். பிள்ளைகளுக்கு திருமணமான பின் தன் சொந்த ஊருக்கு வந்தார். தந்தையின் இடத்தில் வீடு கட்டி வசிக்கிறார். பல ஆண்டுகள் மும்பையில் வசித்தாலும், அதி நவீன வாழ்க்கைக்கு மாறவில்லை. இப்போதும் தன் வீட்டை கிராமிய மணத்துடன் வைத்துள்ளார்.
2 மணி நேரம் தேவையற்ற பொருட்களை வைத்து, தன் கற்பனை வளத்தால், கலைப்பொருட்களை தயாரித்து, வீட்டையும், சுற்றுப்புறத்தையும் அழகாக்கியுள்ளார். 80 வயதிலும் சுறுசுறுப்பாக, உற்சாகமாக செயல்படுகிறார். தங்களின் திறமையை வெளிப்படுத்த, வயதோ, முதுமையோ தடையாக இருக்காது என்பதற்கு, இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
தினமும் இரண்டு மணி நேரம், கலை பொருட்களை தயாரிப்பதில் ஈடுபடுகிறார். அவரது வீட்டுக்குள் சென்றால், புதிய உலகுக்கு வந்துள்ளோம் என்ற உணர்வு ஏற்படும். ஒவ்வொரு பொருட்களும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
இதை பார்க்கவே பள்ளி மாணவர்கள், சுற்றுப்புற கிராமத்தினர், சுமதியின் வீட்டுக்கு வருகின்றனர். இவரது வீட்டை கடந்து செல்வோர், இங்குள்ள கலை பொருட்களால் ஈர்க்கப்படுகின்றனர். உள்ளே சென்று சுற்றி பார்த்து விட்டு செல்கின்றனர்.
கிராமத்தில் வசிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர் நிதின் வாஸ் கூறியதாவது:
சுமதி ஷெட்டி, எங்கள் ஊருக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறோம். இந்த வயதிலும் அவரது கலைத்திறனை கண்டு நாங்கள் ஆச்சரியப்படுகிறோம்.
தேவையற்ற பொருட்களை வீதியில் வீசி, அசுத்தமாக்குகிறோம். இத்தகைய பொருட்களுக்கு சுமதி கலை வடிவம் கொடுக்கிறார். அவரது பணியை நாங்கள் பாராட்டுகிறோம்.
இவர் மற்றவருக்கு முன்னுதாரணமாக வாழ்கிறார். இவரை போன்று நாமும் செயல்பட்டால், வீடும் அழகாகும். சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் - .

