/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் புவனேஸ்வரி
/
பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் புவனேஸ்வரி
ADDED : பிப் 09, 2026 05:01 AM

- நமது நிருபர் -
கர்நாடகாவின் வட மாவட்டங்கள் கல்வி, பொருளாதாரத்தில் இன்னும் பின்தங்கிய நிலையில் உள்ளன. அந்த பகுதிகளில் சரியான வேலை வாய்ப்பு இல்லாததால், பெங்களூரு, மும்பை, ஹைதராபாத்திற்கு வேலை தேடி செல்கின்றனர். இதில் பெண்கள் தான் அதிகம்.
விஜயபுராவின் இண்டி தாலுகா பாபலடா கிராமத்தில் வசிக்கும் புவனேஸ்வரி என்பவர், விஜயபுரா மாவட்ட பெண்கள் வேலை தேடி வேறு இடங்களுக்கு செல்வதை தடுக்கும் வகையில், பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
நான் சிறுமியாக இருந்த போது, எங்கள் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு குடும்பம், அடிக்கடி வேலை தேடி வேறு ஊருக்கு சென்று விடுவர். ஆண்டில் ஆறு மாதங்கள் வீட்டிலேயே இருக்க மாட்டார்கள். பெண்கள் வேலைக்காக வேறு இடங்களுக்கு செல்வதால், அவர்கள் குடும்பத்தில் ஏதாவது பிரச்னை ஏற்படுவதை பார்த்து உள்ளேன்.
எங்கள் குடும்பத்தில் நிலவிய பொருளாதார பிரச்னையால், 2013ல் கல்லுாரிக்கு 2,500 ரூபாய் கட்டணம் செலுத்த முடியாமல் பொருளாதாரம் படிக்க வேண்டும் என்ற ஆசையை கைவிட்டேன். பின், விஜயபுராவில் உள்ள அக்கமாதேவி மகளிர் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் தில்ஷாத் உதவியுடன், முதுகலை ஆராய்ச்சி பட்டம் பெற்றேன்.
ஆராய்ச்சியின் போது, விஜயபுராவில் இருந்து மஹாராஷ்டிராவுக்கு வேலை தேடி செல்லும் பெண்களை நேர்காணல் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. மற்ற மாநிலங்களுக்கு வேலை தேடி சென்றாலும் குறைந்த வருமானமே கிடைப்பது தெரிந்தது.
பின், 'ஓடலத்வானி மகிளா' என்ற பெயரில் 15 சுய உதவி குழுக்களை ஒருங்கிணைந்து, ஒரு அமைப்பை துவக்கினேன். இந்த அமைப்பின் மூலம் பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.
அமைப்பின் மூலம் அரசிடம் இருந்து குறைந்த வட்டியில் பெண்களுக்கு கடன் பெற்று கொடுத்தோம். கால்நடை வளர்ப்பு, இயற்கை முறையில் விவசாயம் செய்வது; காய்கறிகள் வளர்ப்பில் ஈடுபட ஊக்குவித்தோம். விஜயபுராவில் தற்போது 400 பெண்களை தொழில் முனைவோராக மாற்றி உள்ளோம். ஏழை குழந்தைகளுக்கு நான்கு கிராமங்களில் கல்வி மையங்கள் அமைத்து, படிப்பில் பட்டம் பெற்ற பெண்கள் மூலம் கல்வி அளிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

