/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
கைத்தறி நெசவாளர்களுக்கு உதவும் ஹேமலதா
/
கைத்தறி நெசவாளர்களுக்கு உதவும் ஹேமலதா
ADDED : மார் 09, 2026 06:03 AM

- நமது நிருபர் -
விவசாயம் போல மிகவும் கஷ்டமான வேலைகளில் கைத்தறி நெசவும் ஒன்று. கைத்தறி நெசவில் செய்யும் வேலைக்கேற்ப ஊதியம் கிடைப்பதில்லை. இதனால், பலரும் கைத்தறி நெசவில் இருந்து வெளியேறுகின்றனர். இப்படிப்பட்ட, கைத்தறி நெசவாளர்களுக்கு உதவி செய்வது என்பது மகத்தானது. அவர்களுக்கு செய்யும் உதவி கைத்தறி நெசவை இவ்வுலகில் காப்பாற்றுகிறது. இதுபோன்று வறுமையில் வாடும் நெசவாளர்களை சந்தித்து, அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் வேலையை செய்பவர் தான் ஹேமலதா. இவரை பற்றி, இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.
கர்நாடகாவின் மைசூரு நகரை பூர்வீகமாக கொண்டவர் ஹேமலதா, 43. இவர், அமெரிக்காவில் படித்து, அங்கேயே பணிபுரிந்தார். 2014ல் இந்தியா திரும்பினார். இந்தியா வந்ததும், கர்நாடகாவின் பல மாவட்டங்களுக்கு பயணம் செய்தார். இந்த பயணமே இவரது வாழ்வின் திருப்புமுனையாக அமைந்து விட்டது. பயணத்தின் போது, சில கிராமங்களில் கைத்தறி நெசவாளர்களை சந்தித்து உள்ளார்.
அவர்கள் எப்படி புடவை தயாரிக்கின்றனர் என்பதை நேரில் பார்த்து தெரிந்து கொண்டார். மேலும், கைத்தறி நெசவின் மீது ஈர்ப்பு கொண்டார். அப்போது, நெசவாளர்கள் படும் கஷ்டத்தை கேட்டு அறிந்து கொண்டார்.
அறக்கட்டளை இவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்பதற்காக 2015ல், 'புனர்ஜீவன்' அறக்கட்டளையை நிறுவினார். இந்த அறக்கட்டளை மூலம் வறுமையில் வாடும் நெசவாளர்களுக்கு நிதியுதவி செய்தார். மேலும், அவர்கள் தயாரிக்கும் புடவையை நேரடியாக கொள்முதல் செய்து, அதை விற்று அதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கை புடவையை உருவாக்கியவர்களுக்கு தருகிறார்.
அதுமட்டுமின்றி, அரசு, தனியார் நடத்தும் கண்காட்சிகளில் 'ஸ்டால்கள்' அமைத்து, நெசவாளர்கள் நெய்த சேலைகளை நேரடியாக விற்பார். இதிலிருந்து வரும் லாபத்தில் ஒரு பங்கை அவர்களுக்கு கொடுத்து விடுவார். இது, நெசவாளர்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.
உதாரணமாக, ஒரு புடவையை நெய்தால் 200 ரூபாய் கூலி கிடைக்கும் இடத்தில் 500 ரூபாய் லாபத்தை நெசவாளர்களுக்கு கொடுத்தார். இது, அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதுவரை இவரது அறக்கட்டளை மூலம் நுாற்றுக்கணக்கான கைத்தறி நெசவாளர்கள் பயனடைந்து உள்ளனர். மேலும், ஹேமலதாவின் நண்பர்கள் சிலர் கேட்கும் வகையிலான புடவைகளையும் தயார் செய்து கொடுக்கிறார்.
இது குறித்து ஹேமலதா கூறுகையில், “மாதம் 250 புடவைகள் என் அறக்கட்டளை மூலம் தயாரிக்கப்படுகின்றன. இந்த புடவைகள் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.
''இதன் மூலம் லட்சக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது. கிடைக்கும் வருவாயில் உரிய பங்கை நெசவாளர்களுக்கு கொடுத்து விடுவேன். திறமை இருப்பவர்களுக்கு நாம் செய்யும் சிறு உதவி, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்,” என்றார்.

