/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
திடீரென காணாமல் போன கணவர்; ஹோட்டல் நடத்தி சாதித்த மனைவி
/
திடீரென காணாமல் போன கணவர்; ஹோட்டல் நடத்தி சாதித்த மனைவி
திடீரென காணாமல் போன கணவர்; ஹோட்டல் நடத்தி சாதித்த மனைவி
திடீரென காணாமல் போன கணவர்; ஹோட்டல் நடத்தி சாதித்த மனைவி
ADDED : மார் 02, 2026 05:11 AM

பணத்துடன் வருகிறேன்' என கூறி சென்ற கணவர் வராததால், சுயமாக நடமாடும் ஹோட்டல் தொழில் துவக்கி, இன்று மாநிலம் முழுதும் அறியப்படும் பெண்ணாக மாறிய தன்னம்பிக்கை பெண் குறித்து பார்க்கலாம்.
ஹாசனை சேர்ந்தவர் ஷில்பா, 42. தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரை சேர்ந்த டிராவல்ஸ் தொழில் நடத்துபவருடன், 2005ல் திருமணமானது. திருமணமான புதிதில் எல்லாம் நன்றாக தான் இருந்தது. வயதான தனது பெற்றோரை பார்த்து கொள்ள யாரும் இல்லாததால், தன்னுடனே கணவரை ஷில்பா வைத்து கொண்டார்.
ஒரு நாள் தொழில் விஷயமாக பெங்களூரு சென்று பணத்துடன் வருகிறேன் என்று கூறிவிட்டு கணவர் சென்றார். போனவர் திரும்பி வரவே இல்லை. என்ன செய்வது, எங்கு செல்வது என்று தெரியவில்லை. ஷில்பாவுக்கு உறவினர்களும் இல்லை. தன் 3 வயது மகனுக்கு பால் வாங்க கூட கையில் பணம் இல்லை. சில ஆண்டுகள் வீட்டு பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். ஆனாலும் அந்த பணத்தால் குடும்பத்தின் பொருளாதாரத்தை மாற்ற முடியவில்லை.
அப்போது தான், ஹோட்டல் துவங்கலாம் என்று எண்ணினார். அப்போது முதலீடு செய்ய அவரிடம் பணம் இல்லை.
தன் மகனின் படிப்புக்காக சேர்த்து வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் இருந்தது. இந்த பணத்தை வைத்து ஹோட்டல் துவங்கி, நஷ்டமானால் என்ன செய்வது என்று எண்ணிய அவர், கடைசியில் வேறு வழியில்லாமல், அதே பணத்திலும், சில பெண்கள் சுயஉதவி குழுக்கள் உதவியாலும் கடன் பெற்று, பழைய சரக்கு வாகனத்தை வாங்கினார்.
அதை, நடமாடும் ஹோட்டலுக்கு ஏற்றபடி மாற்றி, 2015ல் ஹோட்டல் துவக்கினார். கடைக்கு, 'ஹள்ளி மனே ரொட்டி' எனும் 'கிராமத்து வீட்டு ரொட்டிகள்' என பெயரிட்டார். சோள ரொட்டி, ராகி ரொட்டியை பிரதான மெனுவாக சேர்த்தார்.
மங்களூரு மக்கள் இந்த ரொட்டிகளை விரும்பி சாப்பிட்டனர். நாளுக்கு நாள், பல இடங்களில் இருந்தும் தேடி வந்து வாங்கி சென்றனர். நாட்கள் செல்லச் செல்ல வெந்தயக்கீரை சாதம், தக்காளி சாதம், பிசிபேளா பாத், தட்டே இட்லி என பல ஐட்டங்களை சேர்த்தார். ஞாயிற்று கிழமைகளில் மட்டும் கேழ்வரகு களி விற்பனை செய்கிறார். இவர் வைக்கும், 'கெட்டி சட்னி' மிகவும் பிரபலம்.
தரமான உணவு வழங்க வேண்டும் என்பதற்காக, இவரே தினமும் காலை மார்க்கெட்டிற்கு சென்று, பொருட்களை வாங்கி வருகிறார். அத்துடன் இங்கு கிடைக்காத பொருட்களை, தனது சொந்த ஊரான ஹாசனில் இருந்து வரவழைக்கிறார். இவரின் ரொட்டி புகழ் பெற்றதால், சில ஹோட்டல்களில் இருந்தும் ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர். இவருக்கு துணையாக, அவரது இளைய சகோதரர் உள்ளார்.
இவரின் சாதனை கதை, நாளிதழ் ஒன்றில் வெளியானது. இதை பார்த்த தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா, ஷில்பாவுக்கு ஒரு பொலீரோ மேக்சி டிரக் பிளஸ் வாகனத்தை பரிசாக வழங்கினார்.
இவரை பணியை பாராட்டி, பல்வேறு அமைப்புகள் இவரை கவுரவித்துள்ளன. மேலும் விபரங்களுக்கு 80504 56379, 90355 21753 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

