ADDED : ஆக 09, 2026 11:08 PM

- நமது நிருபர் -:
டாக்டர் என்றால் குறிப்பிட்ட நோய்களை குணமளிப்பதில் வல்லுனராக இருப்பர். ஆனால், மைசூரை சேர்ந்த பெண் ஒருவர், டாக்டராக மட்டுமின்றி, மைசூரின் முதல், 'அயர்ன் உமன்' என்ற பட்டத்தையும் பெற்று, பெருமை தேடி தந்துள்ளார்.
மைசூரை சேர்ந்தவர் டாக்டர் அஜய் ஹெக்டே. இவரது மனைவி டாக்டர் உஷா ஹெக்டே, 54. ஜே.எஸ்.எஸ்., பல் மருத்துவமனையில் பல் டாக்டராக பணியாற்றி வருகிறார். சிறு வயதில் இருந்தே உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டவர்.
ஆஸ்திரேலியாவில் 2019ல், அயர்ன் மேன் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா டிரையத்லான் போட்டி நடந்தது. இதில், இந்தியாவில் இருந்து டாக்டர் உஷா ஹெக்டே உட்பட, 40 பேர் பங்கேற்றனர். மைசூரில் இருந்து பங்கேற்றவர்களில் இவர் ஒருவர் மட்டுமே.
டிரையத்லான் என்பது, 3.86 கி.மீ., கடலில் நீச்சல் அடிக்க வேண்டும். பின், 180.25 கி.மீ., சைக்கிளில் செல்ல வேண்டும். இறுதியில் 42.20 கி.மீ., ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க வேண்டும்.
இவை அனைத்தும், 17 மணி நேரத்துக்குள், ஒன்றன் பின் ஒன்றாக கடந்து இலக்கை அடைய வேண்டும். இப்போட்டியில் உலகம் முழுதும் இருந்தும், 1,169 பேர் பங்கேற்றனர்.
இதில், பெண்கள் பிரிவில் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று, 14 மணி நேரம், 30 நிமிடங்கள் 24 வினாடிகளில் இலக்கை அடைந்து, முதலிடம் பிடித்து நாட்டுக்கும், மாநிலத்துக்கும், டாக்டர் உஷா ஹெக்டே பெருமை தேடி தந்தார்.
தன் வெற்றி குறித்து உஷா ஹெக்டே கூறுகையில், ''ஓர் ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பது போல, என் வெற்றிக்கு பின்னால் என் கணவர் உள்ளார்.
''நான் பங்கேற்கும் அனைத்து போட்டிகளிலும், அவரும் வந்து எனக்கு ஊக்கம் அளித்தார். இப்போட்டியில் பங்கேற்பது அவ்வளவு சுலபம் அல்ல. இதற்காக மூன்று ஆண்டுகள் முயற்சித்து, தகுதி பெற்றேன்,'' என்றார்.
இது தவிர, 2024ல் உலகின் மிகவும் உயரமான மலையான எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்து உள்ளார். இதன் மூலம், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த மைசூரை சேர்ந்த ராணுவ மேஜர் ஸ்மிதா லட்சுமணனுக்கு அடுத்து, இரண்டாவது இடத்தை உஷா ஹெக்டே பெற்றார்.
