/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
உணவு டெலிவரி பணியில் சாதிக்கும் கொடவா பெண்
/
உணவு டெலிவரி பணியில் சாதிக்கும் கொடவா பெண்
ADDED : பிப் 23, 2026 04:41 AM

- நமது நிருபர் -
இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் ஐ.டி., மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நேரில் சென்று வேலை செய்வோர், வீட்டில் இருந்தே பணி செய்வோருக்கு ஹோட்டலுக்கு சென்று சாப்பிட கூட நேரம் கிடைப்பது இல்லை. ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர். போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் , வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் உணவு விநியோகம் செய்வது, உணவு விற்பனை பிரதிநிதிகளுக்கு பெரும் சவாலாகவே மாறி உள்ளது.
ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே உணவு விற்பனை பிரதிநிதியாக பணியாற்றிய நிலையில், தற்போது பெண்களும் பணியாற்ற துவங்கி உள்ளனர். போக்குவரத்து நெரிசல் உட்பட பல சவால்களை சந்தித்து, வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த உணவு, மருந்துகளை டெலிவரி செய்கின்றனர்.
இவர்களில் ஒருவரான சரிதா கூறியதாவது:
என் சொந்த ஊர் குடகு. கொடவா சமூகத்தை சேர்ந்தவள். திருமணத்திற்கு பின், பெங்களூரு தொம்மலுாரில் வசிக்கிறேன். முதலில் ஷூ விற்பனை கடையில் வேலை செய்தேன். கொரோனாவுக்கு பின் அந்த கடை மூடப்பட்டது. என் வேலை பறிபோனது.
வேறு வேலை தேடி பல இடங்களுக்கு சென்றேன். எங்குமே கிடைக்கவில்லை. அப்போது தான் உணவு விற்பனை பிரதிநிதியாக மாறலாம் என்று நினைத்தேன். எனக்கு ஸ்கூட்டர் ஓட்ட தெரியும் என்பதால் கணவர், குடும்பத்தினர் அனுமதி பெற்று, உணவு விற்பனை பிரதிநிதி வேலையில் சேர்ந்தேன்.
முதலில் இந்த வேலையில் சேர்ந்த போது, நம்மால் தாக்கு பிடிக்க முடியுமா என்று கவலை இருந்தது. ஆனால் வேலைக்கு சேர்ந்த ஒரு சில நாட்களில் அந்த கவலை பறந்து போனது. பல வாடிக்கையாளர்கள் எனக்கு ஊக்கம் அளித்தனர். பெண்கள் மனது வைத்தால் எல்லாமே சாத்தியம் .
இவ்வாறு அவர் கூறினார்.

