பால் பண்ணையில் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வருமானம் ஈட்டும் மங்கலம்மா
பால் பண்ணையில் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வருமானம் ஈட்டும் மங்கலம்மா
ADDED : மே 03, 2026 11:26 PM

- நமது நிருபர் -:
மாண்டியா மாவட்டம், டிங்கா கிராமத்தை சேர்ந்தவர் மங்கலம்மா, 48. இவர் தனது சிறுவயதில் இருந்தே பசுக்களை வளர்த்து வருகிறார். இவருக்கு மாடு மேய்ப்பது மிகவும் பிடித்தமான விஷயம். மாடுகளை மனிதர்கள் போல நடத்துகிறார். இவர் தனது வீட்டிற்கு பின்புறம் ஒரு பால் பண்ணை வைத்து உள்ளார். இந்த பால் பண்ணையில், 30க்கும் மேற்பட்ட பசுக்கள், இரண்டு எருமை மாடுகள் இருக்கின்றன.
இந்த பண்ணையில் இருந்து ஆண்டுக்கு லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார். இவரது திறமையை பாராட்டி, இவருக்கு 'கர்நாடகாவின் சிறந்த பால் பண்ணை விவசாயி' எனும் பட்டம் இந்திய பால் சங்கத்தால் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.
இது, மங்கலம்மாவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தற்போதும், அவர் தொடர்ச்சியாக பால் பண்ணையில் வேலை செய்கிறார். கடுமையான உழைப்பாளியும் கூட.
தன் வாழ்க்கை பயணம் குறித்து, மங்கலம்மா கூறியதாவது:
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, நானும் என் கணவரும் பால் பண்ணை அமைக்க முடிவு செய்தோம். இற்காக பலரிடம் ஆலோசனைகள் கேட்டேன். பெரிய அளவில் முதலீடு இல்லை என்பதால், சிறிய அளவில் இரு மாடுகளை வைத்து துவங்கினேன்.
இப்போது, பால் கறக்கும் இயந்திரம் உட்பட பல அதிநவீன இயந்திரங்கள் பண்ணையில் இருக்கின்றன.
பசுக்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே தரமான பாலை உற்பத்தி செய்ய முடியும்.
இதனாலே, பசுவின் நலனின் கூடுதல் அக்கறை செலுத்துகிறேன். இந்த தொழில் மூலம் தற்போது ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறேன். பிடித்த தொழிலை தொடர்ச்சியாக செய்தால் வெற்றி கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
